Published : 16 Jul 2020 09:36 PM
Last Updated : 16 Jul 2020 09:36 PM

கேரளாவில் இன்று மிக அதிகமாக 722 பேருக்குக் கரோனா: முதல்வர் பினராயி விஜயன் பேட்டி 

திருவனந்தபுரம்

கேரளாவில் இன்று 722 பேருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் 2 இளைஞர்கள் மரணமடைந்துள்ளதாகவும் முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

கேரள முதல்வர் பினராயி விஜயன் வியாழக்கிழமை திருவனந்தபுரத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:

’’கேரளாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் விஷயத்தில் மேலும் சில வித்தியாசங்கள் வந்து கொண்டிருக்கின்றன. நாளுக்கு நாள் நோய் அதிகரிக்கிறது என்பதுதான் அந்த வித்தியாசமாகும்.

இன்று நமது மாநிலத்தில் 722 பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை நோய் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. இதுவரை 10,275 பேருக்குக் கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இன்று நோய் பாதிக்கப்பட்டவர்களில் 157 பேர் வெளிநாடுகளில் இருந்தும், 62 பேர் வெளிமாநிலங்களில் இருந்தும் வந்தவர்கள் ஆவர்.

கரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்ததன் மூலம் 481 பேருக்கு நோய் பரவியுள்ளது. இதில் 34 பேருக்கு நோய் எப்படி, எங்கிருந்து பரவியது எனத் தெரியவில்லை. இன்று நோய் பாதிக்கப்பட்டவர்களில் திருவனந்தபுரம் மாவட்டத்தில்தான் மிக அதிகமாக 339 பேருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இன்று நோய் பாதிக்கப்பட்டவர்களில் 12 பேர் சுகாதாரத்துறையைச் சேர்ந்த ஊழியர்கள் ஆவர். 5 பேர் எல்லைப் பாதுகாப்புப் படையையும், 3 பேர் இந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்புப் படையையும் சேர்ந்தவர்கள் ஆவர்.

கேரளாவில் கரோனா பாதிப்பால் 2 பேர் மரணமடைந்துள்ளனர். திருச்சூர் மாவட்டம் தம்புரான்படி பகுதியைச் சேர்ந்த அனீஷ் என்ற 39 வயதான இளைஞரும், கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த முகமது சலீம் என்ற 25 வயதான இளைஞரும் மரணமடைந்துள்ளனர். அனீஷ் சென்னையில் ஏர் கார்கோவில் பணிபுரிந்து வந்தார். சலீம் அகமதாபாத்தில் பணிபுரிந்து வந்தார்.

இன்று நோய் பாதிக்கப்பட்டவர்களில் 339 பேர் திருவனந்தபுரம் மாவட்டத்தையும், 57 பேர் எர்ணாகுளம் மாவட்டத்தையும், தலா 42 பேர் கொல்லம் மற்றும் மலப்புரம் ஆகிய மாவட்டங்களையும், 39 பேர் பத்தனம்திட்டா மாவட்டத்தையும், 33 பேர் கோழிக்கோடு மாவட்டத்தையும், 32 பேர் திருச்சூர் மாவட்டத்தையும், 26 பேர் இடுக்கி மாவட்டத்தையும், 25 பேர் பாலக்காடு மாவட்டத்தையும், 23 பேர் கண்ணூர் மாவட்டத்தையும், 20 பேர் ஆலப்புழா மாவட்டத்தையும், 18 பேர் காசர்கோடு மாவட்டத்தையும், தலா 13 பேர் கோட்டயம் மற்றும் வயநாடு ஆகிய மாவட்டங்களையம் சேர்ந்தவர்கள் ஆவர்.

இன்று 228 பேர் நோயிலிருந்து குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 16,052 பேருக்குப் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. கேரளாவில் பல்வேறு பகுதிகளில் 1,83,900 பேர் கண்காணிப்பில் உள்ளனர். இவர்களில் 5,432 பேர் மருத்துவமனைகளில் உள்ளனர்.

கரோனா நோய் அறிகுறிகளுடன் இன்று 804 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். தற்போது 5,372 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 4,72,271 பரிசோதனைகள் நடத்தப்பட்டன . இதில் 7,797 பேரின் பரிசோதனை முடிவுகள் இன்னும் வர உள்ளன.

சுகாதாரத்துறை ஊழியர்கள், வெளிமாநிலத் தொழிலாளர்கள் மற்றும் சமூக நெருக்கமுள்ள 85,767 பேரிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் 81,543 பேருக்கு நோய் இல்லை எனத் தெரிய வந்துள்ளது.

கேரளாவில் தற்போது 271 நோய்த் தீவிரம் உள்ள பகுதிகள் உள்ளன. சில பகுதிகளில் நோய் பாதிக்கப்பட்டவர்கள் நம் கவனத்திற்கு வராமல் செல்வது உண்டு. எனவே அந்தப் பகுதி மக்கள் அவர்கள் குறித்த விவரங்களைத் தெரிந்து வைத்திருந்தாலும், இல்லாவிட்டாலும் நமது சமூகத்தில் நோயாளிகள் உள்ளனர் எனக் கருதி, தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்.

குறிப்பாகப் பொது இடங்களில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது தொடர வேண்டும். அதுமட்டுமில்லாமல் கைகளைக் கழுவுவது, முகக் கவசம் அணிவதைக் கட்டாயமாக்க வேண்டும். நோயாளிகள் மற்றும் அவரது குடும்பத்தினரை நாம் ஒதுக்கி வைக்கக்கூடாது. அவர்களுக்குத் தேவையான உதவிகளை நாம் செய்ய வேண்டும்.

வியாபார நிறுவனங்கள், சந்தைகள், மருத்துவமனைகள் ஆகிய மக்கள் கூடும் இடங்களில் நோய்ப் பரவல் அதிகரித்து வருகிறது. திருவனந்தபுரத்தில் ஒரு வணிக நிறுவனத்தில் ஏராளமான ஊழியர்களுக்கு நோய் பரவியதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். பொது இடங்களில் கூட்டமாகச் செல்வது தவிர்க்கப்பட வேண்டும். ஆட்கள் அதிகமாக வரும் இடங்களில் கிருமிநாசினி வைத்திருக்க வேண்டும். நம் சமூகத்தில் நோய் பரவாமல் இருக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நாம் மேற்கொள்ள வேண்டும்.

பரிசோதனைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு வருகிறது. பரிசோதனை முடிவுகள் மிக விரைவாகக் கிடைக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்குத் தேவையான ஊழியர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். திருவனந்தபுரம் மாவட்டத்தில் நிலைமை மிக மோசமாக உள்ளது. இங்கு கரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்ததன் மூலம் நோய் பரவுவது அதிகரித்து வருகிறது. இன்று 301 பேருக்குத் தொடர்பில் இருந்ததன் மூலம் நோய் பரவியுள்ளது.

திருவனந்தபுரம் மாவட்டத்தில் 5 சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு நோய் பரவியுள்ளது. 16 பேருக்கு நோய் எங்கிருந்து, எப்படிப் பரவியது எனத் தெரியவில்லை. திருவனந்தபுரத்தில் ஒரு வணிக வளாகத்தில் நேற்று நடத்தப்பட்ட பரிசோதனையில் 61 பேருக்கு நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 91 பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் இது தெரியவந்தது . இதே நிறுவனத்தில் மேலும் 81 பேருக்குப் பரிசோதனை நடத்தப்பட்டதில் மேலும் 17 ஊழியர்களுக்கு நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது மிக மோசமான நிலையாகும்.

இந்த நிறுவனத்திற்கு திருவனந்தபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் நூற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இந்த நிறுவனத்தில் இன்னும் ஏராளமான பரிசோதனை முடிவுகள் வர உள்ளன. எனவே பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்’’.

இவ்வாறு பினராயி விஜயன் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x