Published : 16 Jul 2020 06:12 PM
Last Updated : 16 Jul 2020 06:12 PM

சபாநாயகர் நோட்டீஸ்; புதிய மனுத் தாக்கல் செய்ய சச்சின் பைலட்டுக்கு ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் உத்தரவு

ஜெய்ப்பூர்

ராஜஸ்தான் சபாநாயகரின் நோட்டீஸை எதிர்த்து விரிவான மனுத்தாக்கல் செய்யுமாறு சச்சின் பைலட் தரப்புக்கு ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டுக்கும், துணை முதல்வரும், மாநில காங்கிரஸ் தலைவருமான சச்சின் பைலட்டுக்கும் இடையே மோதல் உச்சகட்டத்தை எட்டியது. இதனால் சச்சின் பைலட் தனியாக ஒரு அணியாகச் செயல்படத் தொடங்கியதால் ஆளும் அரசுக்குச் சிக்கல் ஏற்பட்டது.

இதையடுத்து, எம்எல்ஏக்கள் கூட்டத்துக்கு வருமாறு காங்கிரஸ் கட்சியின் கொறடா உத்தரவிட்டிருந்தார். ஆனால், அதில் சச்சின் பைலட், விஸ்வேந்திர சிங் மற்றும் ரமேஷ் மீனா ஆகியோர் வராததால் அவர்கள் மீது கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.

ஆட்சியைக் கவிழ்க்க சதித்திட்டம் தீட்டியதற்காக சச்சின் பைலட்டை மாநில காங்கிரஸ் தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கியும், துணை முதல்வர் பதவியைப் பறித்தும் காங்கிரஸ் தலைமை நடவடிக்கை எடுத்தது. அதேபோல, அமைச்சர்களாக இருந்த விஸ்வேந்திர சிங், ரமேஷ் மீனா ஆகியோரின் பதவியும் பறிக்கப்பட்டது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரும் கொறடாவுமான அவினேஷ் பாண்டே , சபாநாயகர் சி.பி.ஜோஷியிடம், காங்கிரஸ் சட்டப்பேரவை எம்எல்ஏக்கள் கூட்டத்துக்கு வராத 19 எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்து நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தியுள்ளார்.

இதையடுத்து, சச்சின் பைலட் மற்றும் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பங்கேற்காத அவரின் ஆதரவு எம்எல்ஏக்களுக்கு விளக்கம் கேட்டு சபாநாயகர் சி.பி.ஜோஷி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அந்த நோட்டீஸுக்கு வரும் வெள்ளிக்கிழமைக்குள் பதில் அளிக்கும்படி சபாநாயகர் கோரியுள்ளார்.

இதையடுதத்து சபாநாயகரின் உத்தரவை எதிர்த்து சச்சின் பைலட் தரப்பினர் ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் முறையிட்டனர். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது சச்சின் பைலட் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே மற்றும் முகுல் ரோஹத்கி ஆகியோர் ஆஜராகினர்.

சபாநாயகர் தரப்பில் அபிஷேக் மனு சிங்வி ஆஜரானர். இந்த வழக்கில் அரசியல் சட்டத்தின் விளக்கம் தேவைப்படுவதால் பதில் மனுத்தாக்கல் செய்ய அவகாசம் கோரினார். விளக்கமான பதில் மனுவை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்ட உயர் நீதிமன்றம் டிவிஷனல் பெஞ்ச் வழக்கை விசாரணை செய்யும் என உத்தரவிட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x