Last Updated : 16 Jul, 2020 10:36 AM

 

Published : 16 Jul 2020 10:36 AM
Last Updated : 16 Jul 2020 10:36 AM

குஜராத்தில் லாக்டவுன் நேரத்தில் காரில் ஊர்சுற்றிய அமைச்சர் மகனைக் கைது செய்த பெண் காவலர் ராஜினாமா

அமைச்சர் மகனுக்கும், காவலர் சுனிதா யாதவுக்கும் வாக்குவாதம் நடந்த காட்சி : படம் உதவி ட்விட்டர்

சூரத்

குஜராத்தின் சூரத் நகரில் லாக்டவுன் கட்டுப்பாடுகளை மீறி காரில் ஊர் சுற்றிய அமைச்சரின் மகனை அதிரடியாகக் கைது செய்த பெண் காவலர் சுனிதா யாதவ் இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், திடீரென வேலையை ராஜினாமா செய்துள்ளார்.

ஆனால், அவர் ராஜினாமா ஏற்கப்படவில்லை என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குஜராத்தின் சூரத் நகரில் கரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்துள்ளதால், அங்கு முழு ஊரடங்கு இரவு நேரத்தில் போடப்பட்டுள்ளது. கடந்த ஞாயிறன்று, பாஜகவைச் சேர்ந்தவரும், சுகாதாரத்துறை அமைச்சருமான குமார் கணானியின் மகன் மற்றும் அவரின் இரு நண்பர்கள் காரில் சென்றனர்.

அவர்களின் காரை மறித்த பெண் காவலர் சுனிதா யாதவ் அவர்களிடம் விசாரணை நடத்தினார். அப்போது அமைச்சரின் மகன் கூறிய காரணம் ஏற்றுக்கொள்ளும் வகையில் இல்லாததால் லாக்டவுன் விதிகளை மீறியதாக காவலர் சுனியா யாதவ் கூறியுள்ளார்.

இதனால், காவலர் சுனிதா யாதவுக்கும், அமைச்சர் மகனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அமைச்சரின் மகன் விடுத்த மிரட்டலில் “ என்னை இங்கிருந்து செல்ல அனுமதிக்காவிட்டால் 365 நாளும் உன்னை இங்கேயே நிற்கவைத்துவிடுவேன். அதற்கு அதிகாரம் இருக்கிறது” எனத் தெரிவித்தார்.
இதைக் கேட்ட காவலர் சுனிதா யாதவ், “ என்னை இந்த இடத்தில் 365 நாட்களும் நிற்க வைக்க நான் உனக்கோ, உன் தந்தைக்கோ அடிமை அல்ல. நான் குஜராத் அரசின் ஊழியர்” எனத் தெரிவித்தார்.

மேலும், இதில் போலஸீாரின் கடமையைச் செய்ய இடையூறாக இருந்ததாகக் கூறியும், மிரட்டல் விடுத்த வகையில் பேசியதாகவும் அமைச்சரின் மகனைக் கைது செய்தார் சுனிதா யாதவ்.

அமைச்சரின் மகன், நண்பர்கள் மீது ஐபிசி 188, 269,270 144 ஆகிய பிரிவுகளில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பான வீடியா சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் வைரலானது, அமைச்சரின் மகனுக்கு எதிராக நடவடிக்ைக எடுத்த சுனிதா யாதவுக்கு ஊடகங்களிலும், மக்கள் மத்தியிலும் பாராட்டுகள் குவிந்தன. சிங்கம் படத்தில் காவல் அதிகாரி போன்று செயல்பட்டதால் லேடி சிங்கம் என்று சுனிதா யாதவ் சமூக ஊடகங்களில் புகழப்பட்டார்.

இந்நிலையில் காவலர் சுனிதா யாதவ் இந்த சம்பவம் நடக்கும் போது வர்ச்சாவாடா பகுதி காவல் நிலையத்தில் பணியாற்றி வந்தார், ஆனால், இந்த சம்பவத்துக்கு பின், சூரத் போலீஸ் தலைமையிடத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இருப்பினும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டதால், சுனிதா யாதவ் விடுப்பில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் காவலர் சுனிதா யாதவ் திடீரென தனது வேலையை ராஜினாமா செய்துள்ளார். இதுகுறித்து சுனிதா யாதவ் கூறுகையில் “ நான் எனது வேலையை ராஜினாமா செய்துவிட்ேடன். நான் எனது கடமையைத்தான் செய்தேன். அமைச்சரின் மகன் விதிமுறைகளைக் மீறியதால் கைதுசெய்தேன். ஆனால் எனது துறையின் உயர் அதிகாரிகள் எனக்கு ஆதரவு அளிக்கவில்லை.

ஏராளமான மிரட்டல்கள், அவதூறு பேச்சுகள் தொடர்ந்து தொலைப்பேசி வாயிலாக வருகின்றன. நான் ஒரு காவலராக எனது கடமையைச் செய்ததற்கு பரிசு. இது நமது அரசு முறையில் தவறு, இந்த அமைச்சர் மகன் போன்றவர்கள் தங்களை விவிஐபி மகன் என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் “ எனத் தெரிவித்தார்

ஆனால், சுனிதா யாதவ் வேலையை ராஜினாமா செய்யவில்லை என்று போலீஸார் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து சூரத் போலீஸ் ஆணையர் ஆர்.பி. பிரம்மாபாட் கூறுகையில் “ சுனிதா யாதவ் ராஜினாமா கடிதம் அளிக்கவில்லை. அவர் அளித்தாலும் ஏற்கமாட்டோம். இப்போது அமைச்சர் மகனுக்கும், சுனிதா யாதவுக்கும் இடையே நடந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. இப்போது அவரால் வேலையை ராஜினாமா செய்ய முடியாது” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x