Published : 16 Jul 2020 08:51 AM
Last Updated : 16 Jul 2020 08:51 AM

திருமலையில் மேலும் 4 அர்ச்சகர்களுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி

திருப்பதி

ஆந்திராவில் நேற்று 2,432 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மொத்த நோயாளிகள் எண்ணிக்கை 35,451 ஆக உயர்ந்துள்ளது. மாநிலத்தில் கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 452 ஆக உயர்ந்துள்ளது.

திருப்பதி மற்றும் திருமலையில் கரோனா தொற்று அதிகரித்து வருவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் திருப்பதி தேவஸ்தான நிர்வாக அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. சித்தூர் மாவட்ட ஆட்சியர் பரத் நாராயண் குப்தா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி அனில்குமார் சிங்கால், கூடுதல் நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி மற்றும் உயரதிகாரிகள் பங்கேற்றனர். இதில் ரயில் நிலையம் எதிரில் உள்ள விஷ்ணு நிவாசம் பக்தர்கள் விடுதியையும் கரோனா நோயாளிகளுக்காக அளிப்பதாக அனில்குமார் சிங்கால் கூறினார்.

இதனிடையே திருமலையில் நேற்று மேலும் 4 அர்ச்சகர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட அர்ச்சகர்கள் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. திருமலை, பாலாஜி நகரில் வசிக்கும் 3 பேருக்கு நேற்று தொற்று உறுதியானது. ஏற்கெனவே தேவஸ்தான ஊழியர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x