இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் இயற்கையான கூட்டாளிகள்: தொடக்க உரையில் பிரதமர் மோடி

இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் இயற்கையான கூட்டாளிகள்: தொடக்க உரையில் பிரதமர் மோடி
Updated on
1 min read

15-வது இந்திய-ஐரோப்பிய ஒன்றிய (மெய்நிகர்) மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி தொடக்க உரை ஆற்றினார்.

அதில் அவர் பேசியதாவது:

மார்ச்சில் நடக்கவிருந்த இந்திய-ஐரோப்பிய ஒன்றிய மாநாட்டை கோவிட்-19 காரணமாக நாங்கள் ஒத்தி வைக்க வேண்டியிருந்தது. மெய்நிகர் தளத்தின் மூலமாக நாம் இன்று சந்திப்பது நல்ல விஷயம். முதற்கண், கொரோனா வைரசால் ஐரோப்பாவில் ஏற்பட்ட இழப்புக்கு எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். உங்களின் தொடக்க உரைக்கு நன்றி. உங்களைப் போலவே, இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு இடையேயான உறவுகளை ஆழப்படுத்தவும், வலுப்படுத்தவும் நானும் உறுதி பூண்டுள்ளேன். இதற்காக நாம் நீண்டகால மூலோபாயத் திட்டத்தை பின்பற்ற வேண்டும்.

இதைத் தவிர, குறிப்பிட்டக் காலக்கெடுவுக்குள் செயல்படுத்தக்கூடிய செயல்திறன் மிக்க திட்டம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும். இந்தியாவும், ஐரோப்பிய ஒன்றியமும் இயற்கையான பங்குதாரர்கள். உலகத்தின் அமைதி மற்றும் நிலைத்தன்மைக்கும் நமது கூட்டுறவு பயன்படும். இந்த உண்மை இன்றைய உலக நிலைமையில் இன்னும் தெளிவாகப் புலப்பட்டுள்ளது.

ஜனநாயகம், பன்முகத்துன்மை, பலதரப்புத்தன்மை, சுதந்திரம் மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகிய உலகளாவிய நல்ல விஷயங்களை இரு தரப்பும் பகிர்ந்துக் கொள்கின்றன. கோவிட்-19-க்குப் பிறகு, பொருளாதாரக் களத்தில் உலகளாவிய புதிய பிரச்சினைகள் எழுந்துள்ளன. இதை எதிர்கொள்ள ஜனநாயக நாடுகளுக்கிடையே பெரிய அளவில் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது.

நமது மக்களின் உடல் நலனும், செல்வமும் இன்று சவால்களை சந்திக்கின்றன. விதிகள்-சார்ந்த சர்வதேச முறையில் பலதரப்பட்ட அழுத்தங்கள் இருக்கின்றன. இத்தகைய சூழ்நிலைகளுக்கிடையே, பொருளாதார மறுகட்டமைப்பிலும், மனிதர்கள்-சார்ந்த மற்றும் மனிதநேயம்-சார்ந்த உலகமயமாக்கலைக் கட்டமைப்பதிலும், இந்திய-ஐரோப்பிய ஒன்றியக் கூட்டு குறிப்பிடத்தக்கப் பங்காற்றலாம். நடப்பு சவால்களைத் தவிர, பருவநிலை மாற்றம் போன்ற நீண்டகால சவால்களும் இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்னுரிமை ஆகும்.

புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தின் பயன்பாட்டை இந்தியாவில் அதிகரிக்க வைப்பதற்கான எங்கள் முயற்சிகளில், முதலீடு மற்றும் தொழில்நுட்பத்தை ஐரோப்பாவில் இருந்து நாங்கள் வரவேற்கிறோம். இந்த மெய்நிகர் மாநாட்டின் மூலம் நமது உறவுகள் இன்னும் பலப்படும் என நான் நம்புகிறேன்.

உங்களிடையே உரையாற்றுவதற்கான வாய்ப்புக் கிடைத்தமைக்காக எனது மகிழ்ச்சியை மீண்டும் ஒரு முறை நான் வெளிப்படுத்துகிறேன்.

இவ்வாறு கூறினார் மோடி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in