Last Updated : 15 Jul, 2020 01:28 PM

 

Published : 15 Jul 2020 01:28 PM
Last Updated : 15 Jul 2020 01:28 PM

என் விஸ்வாசம் தனி மனிதருக்கோ அல்லது ஒரு குடும்பத்துக்கோ அல்ல: காங்கிரஸிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட சஞ்சய் ஜா காட்டம்

என்னுடைய விஸ்வாசத்தை தனி மனிதருக்கோ அல்லது ஒரு குடும்பத்துக்கோ செலுத்த வேண்டிய தேவையில்லை. காங்கிரஸின் சித்தாந்தங்களுக்கு மட்டும் இருந்தால் போதும் என்று காங்கிரஸிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட சஞ்சய் ஜா காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநில காங்கிரஸின் செய்தித் தொடர்பாளராக இருந்தவர் சஞ்சய் ஜா. மத்தியப் பிரதேசத்தில் ஜோதிர் ஆதித்யா சிந்தியா காங்கிரஸிலிருந்து வெளியேறியது, கடந்த சில ஆண்டுகளாக காங்கிரஸின் செயல்பாடுகள் போன்றவற்றைக் குறிப்பிட்டு கடந்த மாதம் ஆங்கில நாளேடு ஒன்றில் சஞ்சய் ஜா கட்டுரை எழுதினார்.

இந்தக் கட்டுரை வெளியான அடுத்த சில நாட்களில் சஞ்சய் ஜாவிடம் இருந்த செய்தித் தொடர்பாளர் பதவியை காங்கிரஸ் தலைமை பறித்தது. இருப்பினும் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகளை, தவறுகளை ட்விட்டரில் சுட்டிக்காட்டி வந்தார் சஞ்சய் ஜா.

ராஜஸ்தான் மாநிலத்தில் அரசியல் குழப்பம் ஏற்பட்டு சச்சின் பைலட் மாநிலத் தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில், "நேற்று ஆதித்யா சிந்தியா, இன்று சச்சின் பைலட், நாளை யார்?" என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

அதுமட்டுமல்லாமல் சச்சின் பைலட்டுக்கு ஆதரவாக தனது ட்விட்டர் பக்கத்தில் சஞ்சய் ஜா பதிவிட்ட கருத்தில், “கடந்த 5 ஆண்டுகளாக சச்சின் பைலட், தனது வியர்வை, ரத்தம், கண்ணீர, உழைப்பு அனைத்தையும் ராஜஸ்தானுக்காகச் செலவழித்தார். 2013லிருந்து 2018-ம் ஆண்டுவரை கடுமையாக உழைத்தார். 23 இடங்கள் பெற்ற காங்கிரஸை 100 இடங்களாக உயர்த்தினார் பைலட். அவருக்கு நாம் சிறந்த பரிசு கொடுத்திருக்கிறோம்” எனத் தெரிவித்தார்.

இந்நிலையில் இந்த ட்விட்டர் கருத்து வெளியான சில மணிநேரங்களில் மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான பாலசாஹேப் தோரட் அறிக்கை வெளியட்டார். அதில், “கட்சிவிரோத நடவடிக்கையிலும், ஒழுக்கக் குறைவாகவும் செயல்பட்டதால், முன்னாள் செய்தித்தொடர்பாளர் சஞ்சய் ஜா கட்சியிலிருந்து உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்படுகிறார்” எனத் தெரிவிக்கப்பட்டது.


இந்த சஸ்பெண்ட் நடவடிக்கை குறித்து சஞ்சய் ஜா நிருபர்களுக்கு இன்று பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், ''காங்கிரஸ் கட்சிக்கு எதிராக என்ன செயல்கள் செய்தேன் எனத் தெரியவில்லை. வியப்பாக இருக்கிறது. இப்போதுதான் நான் பத்திரிகைக் குறிப்பைப் பார்த்தேன். குறைந்தபட்சம் காங்கிரஸ் கட்சி என்னிடம் நேரடியாகப் பேசி நான் என்ன தவறு செய்தேன் என்பதையும் அதனால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதையும் தெரிவித்திருக்கலாம். கட்சியின் விதிமுறைகளை கட்சியே மீறுகிறது. சகிப்பின்மை கலாச்சாரத்தைத்தான் நாம் வெளிப்படுத்தி வருகிறோம்" என்று சஞ்சய் ஜா தெரிவித்தார்.

சஞ்சய் ஜா தனது ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், "நான் தனி மனிதருக்கோ அல்லது ஒரு குடும்பத்துக்கோ எனது விஸ்வாசத்தை வெளிக்காட்ட வேண்டிய அவசியமில்லை. காங்கிரஸின் சித்தாந்தங்களுக்கு விஸ்வாசமாக இருந்தால் போதும். நான் இப்போதும் காந்தி-நேரு சிந்தாந்தவாதியாக இருக்கிறேன். ஆனால் காங்கிரஸில் அது மறைந்துவிட்டது.

காங்கிரஸ் கட்சியின் அடிப்படைக் கட்டமைப்பில் இருக்கும் பிரச்சினைகளைத் தொடர்ந்து நான் எழுப்புவேன். எனது இந்தப் போர் தொடக்கம்தான்” எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x