Last Updated : 01 Sep, 2015 08:09 PM

 

Published : 01 Sep 2015 08:09 PM
Last Updated : 01 Sep 2015 08:09 PM

பிஹார் மக்கள் புத்திசாலிகள்: பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு

பிஹார் மக்கள் புத்திசாலிகள் என்று பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்

பிஹாரில் சட்டப் பேரவைத் தேர்தலை முன்னிட்டு அந்த மாநிலத்தின் பாகல்பூர் நகரில் பாஜக சார்பில் செவ்வாயன்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் மோடி பேசியதாவது:

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத்தும் முதல்வர் நிதிஷ்குமாரும் கூட்டு சேர்ந்துள்ளனர். இதன்மூலம் சோஷலிச தலைவர்களான ராம் மனோகர் லாகியா, ஜெயப்பிரகாஷ் நாராயண் போன்ற பெருந்தலைவர்கள் கட்டிக் காப்பாற்றிய பாரம்பரியத்தை இருவரும் குழிதோண்டி புதைத்துள்ளனர்.

தமது 25 ஆண்டு கால ஆட்சியில் லாலுவும் நிதிஷும் ஜாதிய வெறியையும் வகுப்புவாதத்தையும் மாநிலத்தில் பரப்பினர். 25 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் மாநில முன்னேற்றத்தினை கருத்தில்கொண்டு மக்கள் வாக்களிக்க உள்ளனர். இதற்கான புகழ் எங்களுக்கே வந்துசேரும்.

எத்தனை கட்சிகளும் எத்தனை தலைவர்களும் ஒன்று சேர்ந்து கைகோத்து நின்றாலும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றியை யாரும் தடுத்திட முடியாது.

காங்கிரஸுக்கு எதிராகப் போராடியவர் லோகியா. ஆனால் பதவி ஆசை கொண்ட அவரது ஆதரவாளர்கள் அவருக்கு துரோகம் இழைத்துள்ளனர். ஜெயப்பிரகாஷ் நாராயணனை சிறையில் அடைத்த காங்கிரஸுடன் அவர்கள் கைகோத்துள்ளனர்.

பிஹார் மாநில மக்கள் புத்திசாலிகள். நான் ரூ. 1.25 லட்சம் கோடி உதவித்திட்டத்தை அறிவித்தபிறகு முதல்வர் நிதிஷ்குமார் 2.7 லட்சம் கோடி திட்டத்தை அறிவித்துள்ளார். இப்போதுதான் மாநிலத்தின் வளர்ச்சி தேர்தல் பிரச்சினையாகி உள்ளது.

மத்திய நிதி கமிஷனிடம் இருந்து பிஹார் அரசுக்கு ரூ.3.75 லட்சம் கோடி ஒதுக்கப்படுகிறது. இதில் ரூ.2.7 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்களை மட்டுமே முதல்வர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார். மீதமுள்ள 1.76 லட்சம் கோடி எங்கே போகப் போகிறது, கால்நடைத் தீவன ஊழல்போல அந்தப் பணமும் மாயமாகிவிடுமா?

நான் 2014-ம் ஆண்டில்தான் மத்தியில் பிரதமராகப் பதவியேற்றேன். ஆனால் பிஹாரில் கடந்த 25 ஆண்டுகளாக ஆட்சி நடத்தியவர்கள் என் மீது குறை கூறுகிறார்கள். பிஹாரின் வளர்ச்சிக்கு 25 ஆண்டுகளில் அவர்கள் என்ன செய்தார்கள்?

எனது நிதியுதவியை அவர்கள் கேலி செய்தனர், ஆனால் 2, 3 நாட்களுக்குள் அவர்கள் உணர்ந்து விட்டனர். அதனால் தங்களது வளர்ச்சித் திட்டங்களை அறிவிக்க அவர்கள் தள்ளப்பட்டார்கள். ஒருவழியாக வளர்ச்சி என்பது பிஹாரில் தேர்தல் விவகாரமாகியுள்ளது என்பதில் எனக்கு மகிழ்ச்சியே.

கடந்த கால ஆட்சிகளின்போது லாலுவும் நிதிஷும் பிஹார் மக்களுக்கு துரோகம் இழைத்துள்ளனர். அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அதே துரோகத்தையே மக்களுக்கு பரிசாக அளிப்பார்கள்.

பிஹார் மாநில இளைஞர்கள் பிழைப்பு தேடி வெளிமாநிலங்களுக்கு செல்கின்றனர். பாஜக ஆட்சிக்கு வந்தால் எல்லாம் மாறிவிடும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பிஹார் முதல்வர் நிதிஷ்குமாரின் மரபணுவில் கோளாறு இருக்கிறது என்று பிரதமர் மோடி தெரிவித்த கருத்தை எதிர்த்து பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பிஹாரிகள் புத்திசாலிகள் என்று மோடி இப்போது கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x