பாஜகவின்   ‘ஆபரேஷன் லோட்டஸ்’- சிந்தியாவுக்கு அடுத்து சச்சின் பைலட்- இதே வேலையா?- சிவசேனா தாக்கு

பாஜகவின்   ‘ஆபரேஷன் லோட்டஸ்’- சிந்தியாவுக்கு அடுத்து சச்சின் பைலட்- இதே வேலையா?- சிவசேனா தாக்கு
Updated on
1 min read

மத்தியப் பிரதேசத்தில் ஆபரேஷன் லோட்டஸில் ஜோதிராதித்ய சிந்தியா ராஜஸ்தானில் சச்சின் பைலட், ஆட்சியைக் கவிழ்ப்பதுதான் பாஜக-வின் வேலையா? வேறு வேலை இல்லையா? சீனா பிரச்சினை, கரோனாவையெல்லாம் விடுத்து இதே வேலையாகவா அலைவார்கள் என்று சிவசேனாக் கட்சி கடுமையாகத் தாக்கியுள்ளது.

இது தொடர்பாக அவர்கள் கட்சிப் பத்திரிகை சாம்னாவில் கூறியிருப்பதாவது:

ஒரு புறம் நாடு கரோனா வைரஸினால் தத்தளித்துக் கொண்டிருக்கிறது, இன்னொரு புறம் பாஜக வித்தியாசமான குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது.

மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸின் கமல் நாத் அரசை கவிழ்த்தது, தற்போது ராஜஸ்தானில் கவிழ்க்க முயல்கிறது இருப்பினும் இது முடியவில்லை என்பது வேறு ஒரு விஷயம்.

ம.பி.யில் காங்கிரஸின் சிந்தியா 22 எம்.எல்.ஏ.க்களுடன் பாஜகவில் இணைந்தார். இதற்காக அவருக்கு ராஜ்யசபா எம்.பி. பதவி பரிசு. எதிர்கால அமைச்சர் பதவியும் உறுதி. ம.பி.யில் இது நடக்கும் போதே ராஜஸ்தானில் இப்படி நிகழும் என்று பலரும் கணித்து விட்டனர்.

துணை முதல்வர் சச்சின் பைலட்டும் சிந்தியாவின் பாதையில் செல்வார் என்று கணிக்கப்பட்டது. அது உண்மையாகி வருகிறது.

பைலட் தற்போது 30 எம்.எல்.ஏ.க்களுடன் கெலாட்டுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளார். ராஜஸ்தானின் 200 உறுப்பினர் சட்டப்பேரவையில் காங்கிரஸ் 108 இடங்களுடன் உள்ளது, பாஜக 72 இடங்களுடன் உள்ளது. பைலட் இப்போது கூறுகிறார், காங்கிரஸ் மைனாரிட்டி ஆட்சி என்று.

எம்.எல்.ஏ.க்களை முறைப்படி எண்ணி சாதக நிலையை உறுதி செய்யாமல் பாஜக வெளிப்படையாக எதையும் செய்யாது. ஆனால் இப்போதைக்கு திரைமறைவு வேலைகளைச் செய்து வருகிறது.

மத்தியப் பிரதேசத்தில் ஜோதிராதித்ய சிந்தியாவை ஆபரேஷன் லோட்டஸ், திட்டத்துக்காக நியமித்தது. இப்போது அந்த வலையில் சச்சின் பைலட் விழுந்துள்ளார். பைலட்டுக்கு முதல்வர் பதவி ஆசை உள்ளது, ஆனால் அவர் இளைஞர் எதிர்காலத்தில் கூட முதல்வராகலாம். ஆனால் முதல்வர் அசோக் கெலாட் எனும் சூழ்ச்சியான நபரால் சச்சின் பைலட் முதல்வர் நாற்காலிக்கு போர்க்கொடி தூக்கியுள்ளார். கட்சி பிரச்சினையில் இருக்கும்போது சச்சின் பைலட் இப்படி நடந்து கொள்வது தவறு அது அவருக்கே ஆபத்தாக முடியும்.

பைலட்டின் அராஜகமும் பதவியாசையும் ராஜஸ்தானில் ஆட்சியைக் கவிழ்க்க முனைகிறது, ஆனால் இதனை மத்தியில் ஆளும் பாஜக உதவியில்லாமல் அவர் செய்ய முடியாது. மத்திய அரசும் பார்முலாவை ஒர்க் அவுட் செய்து கவிழ்ப்பு அரசியலில் ஈடுபட்டு வருகிறது.

சீனாவின் ஊடுருவல், கரோனா பரவல் அதிகரிப்பு என்று எத்தனையோ விவகாரங்கள் இருக்கும் போது ஆட்சிக்கவிழ்ப்பு பாஜகவுக்கு முக்கியமாகப் போய்விட்டது. மத்திய அரசுக்கு வேறு வேலை இல்லையா? இதே வேலையாகவா அலைவார்கள்?

இவ்வாறு சாம்னாவில் சிவசேனா சாடியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in