Last Updated : 14 Jul, 2020 08:28 AM

 

Published : 14 Jul 2020 08:28 AM
Last Updated : 14 Jul 2020 08:28 AM

பெங்களூருவில் 564 போலீஸாருக்கு கரோனா: குற்றவாளிகளை கைது செய்ய கட்டுப்பாடுகள் விதிப்பு

பெங்களூருவில் கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட போலீஸாரின் எண்ணிக்கை 564 ஆக உயர்ந்துள்ளது.

கர்நாடகாவில் கரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவிவருகிறது. தொற்று உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 40 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 700 ஆக அதிகரித்துள்ளது. பெங்களூருவில் கரோனாவை கட்டுப்படுத்த இன்று (14-ம் தேதி) இரவு 8 மணி முதல் 22-ம் தேதி அதிகாலை வரை முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பெங்களூரு மாநகர காவல் ஆணையர் பாஸ்கர் ராவ் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பெங்களூருவில் கரோனா வேகமாக பரவி வரும் நிலையில் குற்றங்களை கட்டுப்படுத்துவது மிகவும் சவாலாக இருக்கிறது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு பல்வேறு காவல் நிலையங்களை சேர்ந்த 200 காவலர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 80 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தற்போது ஒரே நாளில் 29 போலீஸாருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கரோனா பாதித்த காவலர்களின் எண்ணிக்கை 564 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 7 காவலர்கள் இறந்துள்ளனர். தொற்று அறிகுறியுள்ள 517 காவலர்கள் வீட்டிலும்,732 காவலர்கள் அரசு கண்காணிப்புமையத்திலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். சிவாஜிநகர், கலாசிபாளையா, அல்சூர் உள்ளிட்ட 25 காவல் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

கரோனா வைரஸ் பரவுவதைதடுக்கும் வகையில் போலீஸாருக்கு பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளோம். 50 வயதுக்கு மேற்பட்டோர், அறுவை சிகிச்சை மேற்கொண்டோர், தீவிரஉடல் நோய் பிரச்சினை உள்ளவர்களுக்கு பணியில் இருந்து விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 40 சதவீத மகளிர் காவலர்களுக்கு வீட்டில் இருந்தவாறு பணியாற்றஉத்தரவிடப்பட்டுள்ளது.

பணியில் உள்ள அனைத்து காவலர்களும் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும். வாகனங்களில் வெளியே சென்றுவரும் போலீஸார் காவல் நிலையத்தில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. குற்ற விவகாரங்களில் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்யக்கூடாது. துணை காவல் கண்காணிப்பாளரின் அனுமதி பெற்று, கரோனா பரிசோதனை முடிவுகள் தெரிந்த பின்னரே கைது செய்ய வேண்டும்.

புகார் அளிக்க வருபவர்களிடம் 6 அடி இடைவெளியுடன் பேச வேண்டும். கிருமி நாசினி தெளிப்பு, சுத்தம் பராமரிப்பு ஆகியவை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு பாஸ்கர் ராவ் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x