Published : 13 Jul 2020 10:14 PM
Last Updated : 13 Jul 2020 10:14 PM

கேரளாவில் இன்று 449 பேருக்குக் கரோனா; 2 பேர் மரணம்: முதல்வர் பினராயி விஜயன் பேட்டி

கேரளாவில் இன்று 449 பேருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் 2 பேர் மரணமடைந்துள்ளதாகவும் முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் திங்கட்கிழமை திருவனந்தபுரத்தில் நிருபர்களிடம் கூறியது:

''கேரளாவில் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை கடந்த சில தினங்களாக 400-ஐத் தாண்டி வருகிறது. இன்று 449 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 162 பேர் நோயிலிருந்து குணமடைந்துள்ளனர்.

இன்று நோய் பாதிக்கப்பட்டவர்களில் 140 பேர் வெளிநாடுகளில் இருந்தும், 64 பேர் வெளி மாநிலங்களில் இருந்தும் வந்தவர்கள் ஆவர். கரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்ததன் மூலம் 144 பேருக்கு நோய் பரவியுள்ளது.

இன்று நோய் பாதிக்கப்பட்டவர்களில் 119 பேர் ஆலப்புழா மாவட்டத்தையும், 63 பேர் திருவனந்தபுரம் மாவட்டத்தையும், தலா 47 பேர் பத்தனம்திட்டா மற்றும் மலப்புரம் ஆகிய மாவட்டங்களையும், 44 பேர் கண்ணூர் மாவட்டத்தையும், 33 பேர் கொல்லம் மாவட்டத்தையும், 19 பேர் பாலக்காடு மாவட்டத்தையும், 16 பேர் கோழிக்கோடு மாவட்டத்தையும், 15 பேர் எர்ணாகுளம் மாவட்டத்தையும், 14 பேர் வயநாடு மாவட்டத்தையும், 10 பேர் கோட்டயம் மாவட்டத்தையும், தலா 9 பேர் திருச்சூர் மற்றும் காசர்கோடு ஆகிய மாவட்டங்களையும், 4 பேர் இடுக்கி மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள் ஆவர்.

கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த 64 வயதான ஆயிஷா என்ற பெண் நேற்று மரணமடைந்தார். மேலும் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த 74 வயதான தியாகராஜன் என்பவர் கடந்த 10 ஆம் தேதி மரணமடைந்தார். இவர்கள் இருவருக்கும் கரோனா இருந்தது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கேரளாவில் கரோனா பாதித்து இறந்தவர்களின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது.

திருவனந்தபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 57 பேருக்கும், கொல்லம் மற்றும் மலப்புரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தலா 20 பேருக்கும், பத்தனம்திட்டா மாவட்டத்தை சேர்ந்த 14 பேருக்கும், கண்ணூர் மாவட்டத்தை சேர்ந்த 9 பேருக்கும், ஆலப்புழா, எர்ணாகுளம் மற்றும் கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தலா 5 பேருக்கும், கோட்டயம் மாவட்டத்தைச் சேர்ந்த 3 பேருக்கும், திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த 2 பேருக்கும், இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் இன்று கரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்ததன் மூலம் நோய் பரவியுள்ளது.

திருவனந்தபுரம், மலப்புரம், கோழிக்கோடு மற்றும் காசர்கோடு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 5 சுகாதாரத் துறை ஊழியர்களுக்கும் இன்று நோய் பரவியுள்ளது. மேலும் ஆலப்புழா மாவட்டத்தைச் சேர்ந்த 77 இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படை வீரர்களுக்கும், கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த 10 ராணுவ வீரர்களுக்கும், 4 தீயணைப்புப் படை வீரர்களுக்கும், திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு எல்லை பாதுகாப்புப் படை வீரருக்கும், 3 மின்வாரிய ஊழியர்களுக்கும் நோய் பரவியுள்ளது.

இன்று மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 28 பேரும், பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த 25 பேரும், கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த 20 பேரும், வயநாடு மாவட்டத்தைச் சேர்ந்த 16 பேரும், திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த 14 பேரும், கோட்டயம் மற்றும் எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தலா 12 பேரும், கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த 10 பேரும், கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த 8 பேரும், ஆலப்புழா மாவட்டத்தைச் சேர்ந்த 7 பேரும், காசர்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த 5 பேரும், திருவனந்தபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 3 பேரும், பத்தனம்திட்டா மாவட்டத்தைச் சேர்ந்த 2 பேரும் நோயிலிருந்து குணமடைந்துள்ளனர்.

இதையடுத்து இதுவரை கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,259 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 4,028 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று வரை கேரளாவில் பல்வேறு மாவட்டங்களில் 1,80,594 பேர் கண்காணிப்பில் உள்ளனர். இவர்களில்1,76,218 பேர் வீடுகளிலும், 4,376 பேர் பல்வேறு மருத்துவமனைகளிலும் உள்ளனர். இன்று கரோனா அறிகுறி களுடன் 713 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 12,230 பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 4,16,282 பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. இதில் 5,407 பரிசோதனை முடிவுகள் இன்னும் வர உள்ளன. இது மட்டுமல்லாமல் சுகாதாரத்துறை ஊழியர்கள், வெளிமாநிலத் தொழிலாளர்கள் மற்றும் சமூக நெருக்கமுள்ள 78,002 பேரிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் 74,676 பேருக்கு நோய் இல்லை எனத் தெரியவந்துள்ளது.

இன்று நோய்த் தீவிரம் உள்ள பகுதிகளின் பட்டியலில் 7 இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதையடுத்து கேரளாவில் நோய் தீவிரமுள்ள பகுதிகளின் எண்ணிக்கை 223 ஆக உயர்ந்துள்ளது. கேரளாவுக்கு இதுவரை வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து 5,60, 234 பேர் வந்துள்ளனர். 3,49,610 பேர் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், 2,10,624 பேர் பல்வேறு நாடுகளிலிருந்தும் வந்துள்ளனர். இதுவரை 54 நாடுகளில் இருந்து 1,187 விமானங்கள் கேரளாவுக்கு வந்துள்ளன''.

இவ்வாறு பினராயி விஜயன் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x