Published : 13 Jul 2020 02:12 PM
Last Updated : 13 Jul 2020 02:12 PM

இந்தியாவின் 2-வது தன்னார்வ தேசிய மீளாய்வு அறிக்கை: ஐ.நா. மன்றத்தில் தாக்கல்

ஐ.நா.வின் உயர்மட்ட அரசியல் மன்றத்தில், இந்தியாவின் 2-வது தன்னார்வ தேசிய மீளாய்வு அறிக்கையை நிதி ஆயோக் சமர்ப்பித்தது

நிலைத்த வளர்ச்சிக்கான ஐக்கிய நாடுகள் சபையின் உயர்மட்ட அரசியல் மன்றம் (எச்எல்பிஎஃப்) 2020-ல், இந்தியாவின் 2-வது தன்னார்வ தேசிய மீளாய்வு அறிக்கையை (வி.என்.ஆர்.) நிதி ஆயோக் சமர்ப்பித்துள்ளது.

எச்எல்பிஎஃப் மன்றம், நிலைத்த வளர்ச்சிக்கான 17 இலக்குகளை எட்டுவதற்கான செயல்பாடுகளையும், எட்டுவதில் உள்ள முன்னேற்றத்தையும் மதிப்பீடு செய்யும் உயர்மட்ட சர்வதேச தளமாகும். வி.என்.ஆர். அறிக்கையை நிதி ஆயோக் அமைப்பின் துணைத் தலைவர் ராஜீவ் குமார் சமர்ப்பித்தார்.

செயல்பாடுகள் நிறைந்த பத்தாண்டு: நிலைத்த வளர்ச்சிக்கான இலக்குகளை சர்வதேச அளவிலிருந்து உள்ளூர் மட்டத்திற்கு கொண்டு செல்லுதல்” என்ற தலைப்பிலான வி.என்.ஆர். 2020 அறிக்கையை நிதி ஆயோக் அமைப்பின் துணைத் தலைவர் ராஜீவ் குமார், உறுப்பினர் வி.கே.பால், தலைமை செயல் அதிகாரி அமிதாப் காந்த் மற்றும் ஆலோசகர் சன்யுக்தா சமதார் ஆகியோர் வெளியிட்டனர்.

கோவிட்-19 பெருந்தொற்றை அடுத்து, எச்எல்பிஎஃப் நிகழ்வு, 2020 ஜூலை 10 முதல் 16-ந் தேதி வரை மெய்நிகர் முறையில் நடைபெறுகிறது. இதில் 47 உறுப்பு நாடுகள் தமது வி.என்.ஆர். அறிக்கைகளை சமர்ப்பிக்க உள்ளன.

ஐக்கிய நாடுகள் அவையின் பொருளாதார மற்றும் சமூக குழுமத்தின் மூலம் எச்எல்பிஎஃப் நிகழ்வு ஆண்டுதோறும் ஜூலை மாதத்தில் 8 நாட்களுக்கு நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் உறுப்பு நாடுகள் அளிக்கும் வி.என்.ஆர். அறிக்கையானது, 2030 செயல் திட்டம் மற்றும் நிலைத்த வளர்ச்சிக்கான இலக்குகளில் அந்தந்த நாடுகளின் செயல்பாடுகளையும், அடைந்திருக்கும் முன்னேற்றத்தையும் மதிப்பிடுவதற்கு முக்கியமானதாக கருதப்படுகிறது.

இந்த நாடுகள் தாமாக முன்வந்து மீளாய்வு செய்வதற்கும், தமது வெற்றிகள், சவால்கள், கற்றுக் கொண்ட பாடங்கள் ஆகியவற்றை பகிர்வதற்கும், இது வழிவகுக்கிறது. நிதி ஆயோக் அமைப்பு இந்தியாவின் முதல் வி.என்.ஆர். அறிக்கையை 2017 ஆம் ஆண்டில் சமர்ப்பித்தது.


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x