Published : 13 Jul 2020 07:01 AM
Last Updated : 13 Jul 2020 07:01 AM

சீனாவில் இருந்து வெளியேறும் வெளிநாட்டு நிறுவனங்களை ஈர்க்க அந்நிய நேரடி முதலீட்டு விதிகளை தளர்த்த முடிவு: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அறிவிப்பு

‘இந்தியா குளோபல் வீக்’ மாநாட்டில் மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் பேசியதாவது: சீனாவில் முதலீடு செய்துள்ள வெளிநாட்டு நிறுவனங்கள், தங்களது முதலீடுகளை வேறு நாடுகளுக்கு மாற்றத் திட்டமிட்டுள்ளன. கரோனாவைரஸ் ஆரம்பத்தில் தோன்றிய சீனாவில் இருந்து வெளியேற வேண்டும் என்பதில் சில நிறுவனங்கள் மிகத் தீவிரமாக உள்ளன.

சீன துருப்புகள் எல்லையில்நடத்திய மோதல், சீனாவை சார்ந்திருப்பதைக் குறைக்க மத்திய அரசு முடிவெடுக்கக் காரணமாகியுள்ளது. இதனால் உள்நாட்டு உற்பத்தித் துறையை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ளது.

இதன் அடுத்த கட்டமாக அந்நிய நேரடி முதலீடுகளில் உள்ள விதிமுறைகளை மேலும் தளர்த்த முடிவுசெய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்புகள் அடுத்த வாரம் வெளியாகும். தொழில் தொடங்க முன்வரும் நிறுவனங்கள் மத்திய, மாநில அரசுகளிடம் பெற வேண்டிய அனுமதிக்கான விதிமுறைகள் எளிமைப்படுத்தப்பட உள்ளன.

சுரங்கத் துறையில் அந்நிய நேரடிமுதலீடுகளை ஈர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. இத்துறையில் வெளிநாட்டினர் முதலீடு செய்வதில் சில கட்டுப்பாடுகள் உள்ளன. அவையேஇத்துறையில் அந்நிய முதலீடு வருவதற்கு தடை கல்லாக உள்ளன. இவற்றை போக்கும் வகையில் புதிய தொழில் கொள்கையையும் அரசு விரைவில் கொண்டு வரஉள்ளது. வனத்துறை பாதுகாப்பு சட்டம் மற்றும் சில விதிகளில் மாற்றம் கொண்டு வரப்பட உள்ளது.இதன் மூலம் இத்துறைகளில் பொருளாதார நடவடிக்கைகள் எளிமையாகும். மேலும் வங்கித் துறை, பங்குச் சந்தைகளிலும் சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட உள்ளன.

கடந்த 40 நாட்களில் பொருளாதார நடவடிக்கைகள் ஏறுமுகத்தில் இருப்பதை குறியீடுகள் உணர்த்துகின்றன. பொருளாதார சரிவில் இருந்து இந்தியா விரைவில் மேலெழுந்து வரும் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு பியூஷ் கோயல் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x