Published : 12 Jul 2020 05:40 PM
Last Updated : 12 Jul 2020 05:40 PM

காங்கிரஸ் எம்எல்ஏ பாஜகவுக்கு தாவல்; ம.பி.யிலும் நெருக்கடி

மத்திய பிரதேசத்தில் மேலும் ஒரு காங்கிரஸ் எம்எல்ஏ இன்று முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் முன்னிலையில் இன்று பாஜகவில் இணைந்தார்.

கடந்த 2018 நவம்பரில் மத்திய பிரதேச சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இதில் அதிக இடங்களைக் கைப்பற்றிய காங்கிரஸ், பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி, சுயேச்சைகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத் முதல்வராக பதவியேற்று 15 மாதங்கள் ஆட்சி நடத்தினார்.

அவருக்கு எதிராக காங்கிரஸின் மற்றொரு மூத்த தலைவர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா போர்க்கொடி உயர்த்தினார். அவரது ஆதரவாளர்களான 6 அமைச்சர்கள் உட்பட 22 எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இதன்பின் ஜோதிர் ஆதித்யசிந்தியாவும் அவரது ஆதரவாளர்களும் பாஜகவில் இணைந்தனர்.

இதனால் கடந்த மார்ச் 20-ம் தேதி காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது. கடந்த மார்ச் 23-ம் தேதி சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் பாஜக அரசு பதவியேற்றது. அதன் பின்னர் ஜோதிராதித்ய சிந்தியா மாநிலங்களவை எம்.பி.யானார். அவரது ஆதரவாளர்கள் ம.பி.யில் அமைச்சர்களாகினர்.

இந்தநிலையில் மத்திய பிரதேசத்தில் மேலும் ஒரு காங்கிரஸ் எம்எல்ஏ இன்று முதல்வர் சிவராஜ் சிங் சவுகானை சந்தித்து பேசினார். காங்கிரஸ் எம்எல்ஏவான பிரத்யூமன் சிங் லோதி இன்று போபாலில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகானை சந்தித்து பேசினார். இதனைத் தொடர்ந்து அவர் இன்று மாலை முறைப்படி பாஜகவில் இணைந்தார்.

சிவராஜ் சிங் சவுகான் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் முன்னிலையில் அவர் பாஜகவில் இணைந்தார். ராஜஸ்தானில் காங்கிரஸ் அரசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது ம.பி.யில் காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவர் பாஜகவுக்கு தாவியுள்ளது அக்கட்சித் தலைவர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x