தங்கம் கடத்தல் வழக்கு: ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் இருவரையும் கொச்சி அழைத்து வந்தது என்ஐஏ: பல்வேறு இடங்களில் காங்கிரஸ் போராட்டம்

தங்கம் கடத்தலில் கைது செய்யப்பட்ட ஸவப்னா சுரேஷ் : படம் ஏஎன்ஐ
தங்கம் கடத்தலில் கைது செய்யப்பட்ட ஸவப்னா சுரேஷ் : படம் ஏஎன்ஐ
Updated on
2 min read


திருவனந்தபுரம் ஐக்கிய அரபு அமீரகத்தின் பெயரைப் பயன்படுத்தி 30 கிலோ தங்கம் கடத்தல் வழக்கில் 2-வது குற்றவாளியாக குற்றம்சாட்டப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயக் இருவரையும் கைது செய்த என்ஐஏ அமைப்பினர் இன்று பிற்பகலில் எர்ணாகுளம் அழைத்து வந்தனர்.

திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரகத்தின் பெயரைப் பயன்படுத்தி 30 கிலோ தங்கம் கடத்தப்பட்டக் கண்டுபிடித்து சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். தங்கத்தை வாங்கவந்திருந்த தூதரகத்தின் முன்னாள் ஊழியர் சரித் குமாரை சுங்கத்துறையினர் கைது செய்தனர். அதன்பின் இந்த வழக்கு தேசிய விசாரணை முகமைக்கு மாற்றப்பட்டது.

கைது செய்யப்பட்ட சரித் குமார் அளித்த தகவலின் படி ஐக்கிய அரபு அமீரகத்தில் ஏற்கெனவே வேலை செய்தவரும், தற்போது கேரள தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றிவரும் ஸ்வப்னா சுரேஷ், அவரின் நண்பர் சந்தீப் நாயர் இருவரையும் தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று இருவரையும் பெங்களூருவில் ைவத்து என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர்.

அவர்கள் இருவரையும் இன்று கொச்சி நகருக்கு என்ஐஏ அதிகாரிகள் அழைத்து வந்தனர். எர்ணாகுளத்தில் உள்ள ஆலுவா மருத்துவமனையில் முதல்கட்டமாக இருவருக்கும் கரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதன்பின் இன்று பிற்பகல் 4 மணிக்கு மேல் என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் இருவரையும் ஆஜர்படுத்தி, காவல் எடுக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தங்கம் கடத்தலில் தொடர்புடைய ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் இருவரையும் என்ஐஏ அதிகாரிகள் அழைத்து வரும் போது கேரளாவில் வழிநெடுக காங்கிரஸ் கட்சியினரும் பாஜகவினரும் மறியல் போராட்டங்களை நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழக –கேரள எல்லையான பாலக்காடு மாவட்டத்தில் உள்ள வாளையார் சோதனைச் சாவடிக்குள் இருவரையும் என்ஐஏ அதிகாரிகள் காரில் அழைத்து வந்தபோது, அவர்களை விடாமல் காங்கிரஸ் தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பதற்றம் நிலவியது.

திருச்சூர் மாவட்டம், பலியக்கேராவிலும் இதேபோன்று காங்கிரஸ் தொண்டர்களும், பாஜகவினரும் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் போலஸீார் லேசாக தடியடி நடத்தி கூட்டத்தினரைக் கலைத்தனர்.

காங்கிரஸ் மூத்த தலைவரும், எதிர்க்கட்சித்தலைவருமான ரமேஷ் சென்னிதலா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் “ முதல்வர் பினராயி விஜயனுக்கு கீழ் வரும் தகவல் தொழில்நுட்பப் பிரிவில் தங்கம் கடத்தலில் குற்றம்சாட்டப்பட்டுள்ள பெண் பணியாற்றியதால் பினராயி விஜயன் பதவியை ராஜினாமா செய்து விசாரணையை எதிர்கொள்ள வேண்டும். தங்கம் கடத்தில் அந்த பெண்ணின் பெயர் இருக்கிறது எனத் தெரிந்ததும் அவரை வேலையிலிருந்து நீக்கிவிட்டார்கள்.

திருவனந்தபுரத்தில் ட்ரிப்பில் லாக்டவுன் அமலில் இருக்கும் போது, எவ்வாறு முக்கியக் குற்றவாளியாகக் கூறப்படும் ஸ்வப்னா சுரேஷ் வேறுமாநிலத்துக்குள் தப்பிச் செல்ல முடிந்தது. எந்தெந்த அதிகாரிகள் இதற்கு உதவினார்கள், அதிகாரிகள் துணையில்லாமல் அந்தப் பெண் தப்பிச் செல்ல முடியாது.

தீவிரமான குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் கூட இன்னும் தகவல் தொழில்நுட்ப முன்னாள் செயலாளர் சிவசங்கரன் மீது நடவடிக்கை ஏதும் அரசு எடுக்கவில்லை. முதல்வரின் முதன்மைச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டபின் ஒரு ஆண்டு விடுப்பு எடுத்து சிவசங்கரன் சென்றுவிட்டார். குற்றம்சாட்டப்பட்ட அந்த பெண்ணுடன் அவருக்கு தொடர்பு இருப்பதாக புகார் எழுந்துள்ளது” எனத் தெரிவித்தார்

பாஜக மாநிலத் தலைவர் கே.சுரேந்திரன் அளித்த பேட்டியில் “ சாமானிய மக்கள் கூட லாக்டவுனில் வெளியேறினால் அவர்களைத் தடுக்கும் போலீஸார், தங்கம் கடத்தலில் முக்கியக் குற்றவாளியாகக் கூறப்படும் ஒருவர் திருவனந்தபுரத்தில் இருந்து ட்ரிப்பில் லாக்டவுனை மீறி வேறு மாநிலத்துக்குச் செல்ல முடியும்.’’ எனக் கூறினார்.

ஆனால் முதல்வர் பினராயி விஜயனோ ‘‘அரசு யாரையும் பாதுகாக்கவில்லை, என்ஐஏ விசாரணையை வரவேற்கிறோம்” எனத் தெரிவித்தார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in