

திருப்பதி சந்திரகிரி அருகே பீமவரம் மலைப்பகுதியில் சிலர் செம்மரங்களை வெட்டி கடத்துவதாக திருப்பதி செம்மர கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்பி ரவிசங்கருக்கு நேற்று அதிகாலையில் ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஆய்வாளர்கள் வாசு, லிங்கராஜு தலைமையில் 2 அதிரடிப்படை குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இவர்களைக் கண்டதும் கடத்தல் கும்பல் இவர்கள் மீது கற்களால் தாக்குதல் நடத்தியுள்ளது. அதன் பின்னர் அவர்கள் செம்மரங்களை அங்கேயே போட்டுவிட்டு வனப்பகுதிக்குள் அக்கும்பல் தப்பிவிட்டது.
இதனை தொடர்ந்து அங்கிருந்த 33 உயர் ரக செம்மரங்களை அதிரடிப்படையினர் கைப்பற்றினர். இதன் மதிப்பு சுமார் ரூ.1.26 கோடி என கூறப்படுகிறது. மேலும், கடத்தல் கும்பல் சம்பவ இடத்தில் விட்டுச் சென்ற பைகளையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். இவை அனைத்திலும் தமிழ் எழுத்துகள் உள்ளன. மேலும், போலீஸாரை தாக்கும்போது கடத்தல் கும்பல் தமிழில் பேசி உள்ளனர். ஆதலால், இவர்கள் திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலை பகுதியைச் சேர்ந்த பழைய குற்றவாளிகளாக இருக்கலாம் என போலீஸார் கூறுகின்றனர்.