குஜராத் மாநில காங்கிரஸ் செயல் தலைவராக ஹர்திக் படேல் நியமனம்: சோனியா காந்தி உத்தரவு

குஜராத் மாநில காங்கிரஸ் செயல் தலைவராக ஹர்திக் படேல் நியமனம்: சோனியா காந்தி உத்தரவு
Updated on
1 min read

ஹர்திக் படேல் குஜராத் மாநில காங்கிரஸ் செயல் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

படேல் சமூகத்தின் முக்கியத் தலைவரான ஹர்திக் படேல் கடந்த 2015-ம் ஆண்டில் இருந்து படேல்சமூகத்துக்கு இடஓதுக்கீடு கேட்டு குஜராத்தில் பல போராட்டங்களை நடத்தினார், பலர் போராட்டத்தில் உயிரழந்தனர், ஹர்திக் படேலும் சிறையில் தள்ளப்பட்டார். இந்நிலையில், கடந்த ஆண்டு ஹர்திக் படேல் முறைப்படி காங்கிரஸ் கட்சியில் இணைந்து அந்த கட்சிக்கு மக்களவைத் தேர்தலில் பிரச்சாரம் செய்தார்.

அவர் மக்களவை தேர்தலில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், குஜராத் உயர் நீதிமன்றம் ஹர்திக் படேல் மீதான வழக்கில் இடைக்கால தடை வழங்க மறுத்துவிட்டது. மேஷானா கலவர வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட வழக்கின் தீர்ப்புக்கு படேல் இடைக்கால தடை கோரியிருந்தார். தடை கிடைக்காததால் ஹர்திக் படேலால் தேர்தலில் போட்டியிட இயலாமல் போனது.

ஆனால் மக்களவைத் தேர்தலில் குஜராத்தில் காங்கிரஸ் படுதோல்வியடைந்தது. காங்கிரஸ் நடவடிக்கைகளில் இருந்து அவர் சற்று ஒதுக்கியே இருந்தார். இந்தநிலையில் ஹர்திக் படேல் குஜராத் மாநில காங்கிரஸ் செயல் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை கட்சித் தலைவர் சோனியா காந்தி பிறப்பித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in