Published : 10 Jul 2020 02:51 PM
Last Updated : 10 Jul 2020 02:51 PM

கரோனா நோயாளிகளுக்கு தகுந்த சிகிச்சை அளிக்கவில்லை எனக் கூறி திருவனந்தபுரத்தில் போராட்டம்

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் கரோனா நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை எனக் கூறி மக்கள் ஆர்ப்பட்டம் நடத்தினர்.

கேரள மாநிலத்தில் கரோனா பாதிப்பு குறைந்து கட்டுப்பாடுகள் வந்த நிலையல் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டபின் நாள்தோறும் கரோனாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வந்தது. மாநிலத்தின் ஒட்டுமொத்த கரோனா எண்ணிக்கையும் 5 ஆயிரத்தைக் கடந்தது. திருவனந்தபுரம் மாவட்டத்தில் மட்டும் கடந்த மாதம் 25ம் தேதி 77 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

13 ஆயிரத்து 513பேர் கண்காணிப்பில் உள்ளனர். 256 பேர் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர். இதனால் திருவனந்தபுரத்தில் திடீர் கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டுள்ளது. அங்கு மும்முனை ஊரடங்கு 6-ம்தேதி அமல்படுத்தப்பட்டது. ஜூலை 6-ம் தேதி முதல் முதல் ஒரு வாரத்துக்கு ஊரடங்கு நடைமுறையில் இருக்கும். மக்கள் அத்தியாவசியப் பணிகளுக்கு உரிய காரணத்தோடு மட்டுமே வீட்டை விட்டு வெளியே வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மருந்துகள் வாங்க வேண்டுமென்றால்கூட மருத்துவர் மருந்துசீட்டு இல்லாமல் மருந்து வாங்க மக்கள் அனுமதிக்கப்படவில்லை. திருவனந்தபுரத்தில் நீதிமன்றங்கள் அனைத்தும் ஒருவாரத்துக்கு மூடப்பட்டுள்ளன. பொதுப்போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. மருந்துக் கடைகள், பலசரக்கு கடைகள், மருத்துவமனைகள் மட்டுமே இயங்குகின்றன.

கடைகளில் அதிகஅளவில் மக்கள் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. தலைமைச் செயலகம், அரசு அலுவலகங்கள் அனைத்தும் ஒருவாரத்துக்கு மூடப்பட்டுள்ளது.

தேவையின்றி வெளியே சுத்தும் மக்கள்மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் தனிமை முகாமுக்கு 14 நாட்கள் அனுப்பி வைக்கப்படுவார்கள் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில் திருவனந்தபுரத்தில் சில இடங்களில் கரோனா நோயாளிகளுக்கு தகுந்த சிகிச்சை அளிக்கப்படவில்லை எனக் கூறி பூந்தூரா பகுதியில் மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதையடுத்து அங்கு அதிரடிப்படை வீரர்கள் குவிக்கப்பட்டனர். மேலும் கரோனா நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிப்பதாக உறுதியளிக்கப்பட்டதை தொடர்ந்து மக்கள் கலைந்து சென்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x