நமது கனவு இந்தியா இதுதானா?- காங். முன்னாள் தலைவர் ராகுல் கேள்வி

நமது கனவு இந்தியா இதுதானா?- காங். முன்னாள் தலைவர் ராகுல் கேள்வி
Updated on
1 min read

உத்தரபிரதேச மாநிலம் சத்னா மாவட்டத்தில் அமைந்துள்ளது சித்ரகூட் பகுதி. இங்கு அனுமதியின்றி செயல்படும் நூற்றுக்கணக்கான சுரங்கங்களில் பழங்குடியினத்தைச் சேர்ந்த ஏராளமானோர் மிகக் குறைந்த கூலிக்கு வேலை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த சுரங்கங்களில் பணிபுரியும் 15 வயதுக்கும் குறைவான சிறுமிகள், பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக ஊடகங்களில் நேற்று முன்தினம் செய்திகள் வெளியாகின. சுரங்கங்களின் உரிமையாளர்கள் மற்றும் அவர்களுக்கு நெருக்கமான பலர், இந்த செயலில் ஈடுபட்டு வருவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இந்த செய்தியை சுட்டிக்காட்டி ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், “சித்ரகூட் பகுதியில் பழங்குடியின சிறுமிகள் அனுபவித்து வரும் வேதனை மிகக் கொடுமையானது. திட்டமிடல் ஏதுமின்றி அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள அந்த சிறுமிகள், தங்கள் குடும்பத்தை காப்பாற்றுவதற்காக இத்தகைய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். நாம் கனவு கண்ட இந்தியா இதுதானா?” என கேள்வி எழுப்பி உள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in