Published : 09 Jul 2020 08:01 PM
Last Updated : 09 Jul 2020 08:01 PM

கேரளாவை உலுக்கும் தங்க கடத்தல்: தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை: மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு

கேரளாவை உலுக்கிய தங்க கடத்தில் விவகாரம் தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தும் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதரகப் பெயரைப் பயன்படுத்தி தங்கம் கடத்தப்படுவதாகக் கிடைத்த தகவலையடுத்து, சுங்கத்துறை அதிகாரிகளுக்கு கடந்த ஜூன் மாதம் 30-ம் தேதி 30 கிலோ தங்கம் வைக்கப்பட்டிருந்த பார்சலைப் பறிமுதல் செய்தனர். இதன் சர்வதேச மதிப்பு ரூ.15 கோடி என்று தெரிவிக்கப்பட்டது.

இந்தப் பார்சலை வாங்குவதற்காக வந்திருந்த சஜித் என்பவரை சுங்கத்துறையினர் மற்றும் போலீஸார் கைது செய்தனர். அவரிடம் சுங்கத்துறையினர் விசாரித்தபோது, தூதரகத்தில் ஏற்கெனவே பணியாற்றியவரும், கேரள தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியில் இருப்பவருமான ஸ்வப்னா சுரேஷ் என்பவருக்குத் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இந்தத் தகவலையடுத்து, ஸ்வப்னாவை போலீஸார் கைது செய்யத் தேடி வருகின்றனர், ஆனால், ஸ்வப்னா தலைமறைவாக இருந்து வருகிறார். ஐ.டி.பிரிவின் நிர்வாகச் செயலாளராக இருந்துவரும் ஸ்வப்னா சுரேஷ், அந்தத் துறையின் செயலாளர் சிவசங்கரனுக்கு நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது.

தகவல் தொழில்நுட்பச் செயலாளராக இருக்கும் சிவசங்கரன், கேரள முதல்வர் பினராயி விஜயனின் தனிச்செயலாளராகவும் கூடுதலாகப் பதவி வகித்து வந்தார். இந்தப் புகார் எழுந்ததையடுத்து, இரு பதவியிலிருந்தும் சிவசங்கரனை கேரள அரசு நீக்கியது.

கேரள முதல்வரின் தனிப்பிரிவுச் செயலாளராக இருந்தவருக்கும், தங்கம் கடத்தலில் உதவிய பெண்ணுக்கும் தொடர்பு இருப்பதால், எதிர்க்கட்சிகள் முதல்வர் பினராயி விஜயனை நோக்கி போர்க்கொடி உயர்த்தியுள்ளன.

எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ரமேஷ் சென்னிதலா, பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதி, தங்கம் கடத்தல் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். பாஜகவும் இதே கோரிக்கையை வலியுறுத்தியுள்ளது.

15 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க கடத்தல் விவகாரத்தை மத்திய அரசின் விசாரணை அமைப்புகள் மூலம் விசாரிக்க வேண்டும் என பிரதமர் மோடியை கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வலியுறுத்தினார்.

இந்தநிலையில் இந்த தங்க கடத்தில் விவகாரம் தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தும் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இதுபோன்ற திட்டமிட்ட தங்க கடத்தல் விவகாரம் தேசப் பாதுகாப்புக்கே அச்சுறுத்தலாக இருக்கும் என்பதால் தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x