Published : 09 Jul 2020 03:36 PM
Last Updated : 09 Jul 2020 03:36 PM

காஷ்மீரில் எல்லைப்பகுதியில் 6 முக்கிய சாலைப் பாலங்கள் திறப்பு

புதுடெல்லி

ஜம்மு-காஷ்மீரில் சர்வதேச எல்லை மற்றும் கட்டுப்பாட்டு பகுதியில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று டெல்லியில் இருந்து காணொலிக் காட்சியின் மூலம் ஆறு முக்கிய பாலங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

ஜம்மு-காஷ்மீரில் சர்வதேச எல்லை பகுதியில் போர்த்தந்திர ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பாலங்கள் குறிப்பிட்ட கால அளவிற்குள் எல்லைப்புற சாலைகளுக்கான அமைப்பினால் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

குறிப்பிட்ட காலவரையறைக்குள் இந்த ஆறு பாலங்களைக் கட்டி முடித்தமைக்காக எல்லைப்புற சாலைகளுக்கான அமைப்பின் அனைத்துப் பிரிவு ஊழியர்களையும் பாதுகாப்பு அமைச்சர் பாராட்டியதோடு இத்தகைய பணிகளை மேற்கொள்வதற்கு மிகவும் கடினமான பகுதிகளில், மிக மோசமான தட்பவெட்ப சூழ்நிலைகளில் பணிபுரிவதன் மூலம் இந்த நாட்டின் வளர்ச்சியில் பங்களிப்பு செய்வதற்காகவும் பாராட்டுதல்களைத் தெரிவித்தார்.

எந்தவொரு நாட்டிற்குமே சாலைகளும் பாலங்களும் உயிரோட்டமானவை ஆகும் என்பதோடு தொலைதூரப் பகுதிகளின் சமூக- பொருளாதார மேம்பாட்டிலும் மிக முக்கியமான பங்கினை வகிக்கின்றன என்றும் அவர் குறிப்பிட்டார். ஜம்மு-காஷ்மீர் பகுதியின் மேம்பாட்டில் மத்திய அரசு கொண்டுள்ள உறுதியை மீண்டும் வலியுறுத்திய அவர், இந்த திட்டங்களின் முன்னேற்றம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து கண்காணித்து வந்ததோடு, உரிய நேரத்தில் இத்திட்டங்கள் நிறைவேற்றப்படுவதை உறுதிப்படுத்தும் வகையில் போதுமான நிதி வசதியையும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

முக்கியமான கடமையை நிறைவேற்றியதற்காக எல்லைப்புற சாலைகளுக்கான அமைப்பிற்கு எனது பாராட்டுதல்களைத் தெரிவிக்க விரும்புகிறேன் என்றும் ராஜ்நாத் சிங் குறிப்பிட்டார்.

தொடர்ந்து எல்லைப்புற சாலைகளுக்கான அமைப்பிற்கு பாராட்டு தெரிவித்த பாதுகாப்பு அமைச்சர் எல்லைப்புற சாலைகளுக்கான அமைப்பு முழு அர்ப்பணிப்புடன் நாட்டின் எல்லைப்புறப் பகுதிகளில் தொடர்ந்து சாலைகளையும், பாலங்களையும் கட்டுவதன் மூலம் தொலைதூரப் பகுதிகளையும் சென்றடைய வேண்டும் என்ற அரசின் முயற்சிகளுக்கு உதவி செய்வதாக அமைகிறது. இத்தகைய சாலைகள்தான் எந்தவொரு நாட்டினது உயிரோட்டமாக விளங்குகின்றன” என்றும் குறிப்பிட்டார்.

எல்லைப்புறப் பகுதிகளில் உள்ள சாலைகள் போர்த்தந்திர ரீதியாக வலிமை தருவதாக இருப்பதுடன் தொலைதூரப் பகுதிகளை நாட்டின் பொதுவான பகுதிகளுடன் இணைப்பதாகவும் அமைகின்றன. இந்த வகையில் ராணுவப் படைகளுக்கான போர்த்தந்திர ரீதியான தேவைகளுக்காக இருந்தாலும் சரி, அல்லது சுகாதாரம், கல்வி, வர்த்தகம் போன்ற மேம்பாட்டு பணிகள் தொடர்பானவையாக இருந்தாலும் சரி, இவை அனைத்துமே இத்தகைய தொடர்பு வசதிகளின் மூலமே சாத்தியமாகின்றன என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
ஜம்மு பகுதியில் தற்போது சுமார் 1,000 கிலோமீட்டர் நீளத்திற்கான சாலைகள் கட்டப்பட்டு வருகின்றன என்றும் குறிப்பிட்டார்.

நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் அதிநவீன கருவிகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி எல்லைப்புற சாலைகளுக்கான அமைப்பு கடந்த இரண்டாண்டு காலத்தில் 2,200 கிலோமீட்டர் நீளத்திற்கு சாலை வெட்டும் பணிகளையும், சுமார் 4,200 கிலோமீட்டர் நீளத்திற்கு சாலை மேற்பரப்பு பணிகளையும் சுமார் 5,800 மீட்டர் நீளத்திற்கான பாலங்கள் கட்டுமானத்தையும் செய்து முடித்துள்ளது என்ற தகவலையும் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்தார்.

இந்த ஆறு பாலங்களும் காணொலிக் காட்சியின் மூலம் திறந்து வைக்கப்பட்ட நிகழ்ச்சிக்கு மத்திய இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகத்திற்கான இணை அமைச்சரும், ஊழியர், பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதியங்கள், அணுசக்தி மற்றும் விண்வெளித் துறை ஆகியவற்றுக்கான இணை அமைச்சருமான டாக்டர் ஜிதேந்திர சிங், ஜம்மு பிரதேசத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஜுகல் கிஷோர் சர்மா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த இருவரும் அந்தப் பாலங்கள் இருந்த பகுதிகளில் இருந்தவாறு இந்த காணொலி நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x