Published : 09 Jul 2020 08:21 AM
Last Updated : 09 Jul 2020 08:21 AM

டிராவல் ஏஜென்ஸி முதல் ஐ.டி. மேலாளர் வரை சர்ச்சை நிறைந்த ஸ்வப்னாவின் வாழ்க்கை

ஸ்வப்னா சுரேஷ்

திருவனந்தபுரம்

தங்கக் கடத்தல் வழக்கில் சிக்கியகேரள அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை அதிகாரியான ஸ்வப்னாவின் கடந்த கால வாழ்க்கை சர்ச்சைகளும், திடீர் ஏற்றங்களும் நிறைந்ததாக உள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளாவுக்கு கடத்தி வந்த ரூ.15 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கில், முக்கிய குற்றவாளியாக, கேரள அரசின் தகவல் தொழில்நுட்பப் பிரிவில் ஆபரேஷனல் மேலாளராக பணிபுரிந்து வந்த ஸ்வப்னா சுரேஷ் என்பவர் சேர்க்கப்பட்டுள்ளார். தலைமறைவாகியுள்ள அவரை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதனிடையே, ஸ்வப்னாவின் கடந்த கால வாழ்க்கை மிகுந்த சர்ச்சைகளையும், ஊகிக்க முடியாத ஏற்றங்களும் நிறைந்ததாக இருந்திருப்பது தற்போது தெரியவந்திருக்கிறது.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவரான ஸ்வப்னா,தனது பள்ளிப் படிப்பை அபுதாபியில் முடித்துள்ளார். பின்னர், மகாராஷ்டிராவில் தனது கல்லூரி படிப்பை முடித்துவிட்டு, 2011-ம்ஆண்டு அவர் கேரளா திரும்பினார்.

இதனைத் தொடர்ந்து, திருவனந்தபுரம் விமான நிலையத்தில் ஏர்-இந்தியா நிறுவனத்தின் கீழ் இயங்கும் டிராவல் ஏஜென்ஸியில் ஸ்வப்னா பணியில் சேர்ந்தார்.அங்கு தனது சக பணியாளர்கள் பலர் மீது ஏராளமான பாலியல்புகார்களை அவர் அளித்திருக்கிறார். இது அந்நிறுவனத்தில் பணிபுரிந்த பலர் வேலையிழப்பதற்கு காரணமாக அமைந்தது.

இதனிடையே, பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர், ஸ்வப்னா தன் மீது போலி பாலியல் புகாரை அளித்ததாக கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இதுதொடர்பாக போலீஸார் நடத்திய விசாரணையில், போலிஆவணங்களைப் பயன்படுத்தி ஸ்வப்னா பலர் மீது பாலியல் புகார்களை அளித்தது தெரியவந்தது. இதன்பேரில் போலீஸார் அவர்மீது வழக்கு பதிவு செய்தனர்.

அதன் பிறகு, ஏர்-இந்தியாவில் இருந்து ராஜினாமா செய்த ஸ்வப்னா, திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தில் முக்கியப் பதவியில் அமர்ந்தார். ஆனால், அங்கேயும் அவர் மீது ஏராளமான புகார்கள் வந்ததால் அந்தப் பணியில் இருந்தும் அவர் நீக்கப்பட்டார்.

அதன் பிறகு, திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு ஆள்சேர்ப்பு நிறுவனம் மூலமாக கேரள அரசின் ஐ.டி. துறையில் ஆபரேஷனல் மேலாளராக அவர் பணியில் இணைந்துள்ளார். அவர் மீதானபழைய வழக்குகளை மறைத்துஅவர் பணியில் சேர்ந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் ஸ்வப்னா தற்போது இந்த தங்கக்கடத்தல் வழக்கில் சிக்கியிருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x