Published : 09 Jul 2020 08:08 AM
Last Updated : 09 Jul 2020 08:08 AM

தேசியம், குடியுரிமை, மதச்சார்பின்மை பாடங்கள் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் இருந்து நீக்கம்

புதுடெல்லி

சிபிஎஸ்இ பாடத்திட்டத்திலிருந்து தேசியம், குடியுரிமை, மதச்சார்பின்மை உள்ளிட்ட பாடங்கள் நீக்கப்பட்டுள்ளன.

கரோனா தொற்றுப் பரவல் காரணமாக கல்வித் துறையும் முடங்கி உள்ளதால், நடப்பு கல்வி ஆண்டில் பள்ளிகள் திறப்பது தாமதமாகி வருகிறது. இந்நிலையில், புதிய கல்வி ஆண்டில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை மாணவர்களின் பாட சுமையை 30 சதவீதம் குறைப்பதற்கு மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) முடிவு செய்திருக்கிறது.

இந்நிலையில், 2020-21-ம் கல்வியாண்டுக்கான 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான பாடத்திட்டங்களை சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது. இதில் சில பாடங்கள் நீக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பான சுற்றறிக்கையை சிபிஎஸ்இ இயக்குநர் வெளியிட்டுள்ளார்.

11-ம் வகுப்பு அரசியல் அறிவியல் பாட புத்தகத்தில் இடம்பெற்றிருந்த கூட்டாட்சி, குடியுரிமை, தேசியம், மதச்சார்பின்மை ஆகிய அத்தியாயங்கள் முழுமையாக நீக்கப்பட்டுள்ளன. மேலும் உள்ளாட்சி அரசு நிர்வாகம் ஏன் வேண்டும், இந்தியாவில் உள்ளாட்சி நிர்வாகத்தின் வளர்ச்சி ஆகிய அத்தியாயங்களும் நீக்கப்பட்டுள்ளன.

இதேபோல 12-ம் வகுப்பு பாட திட்டத்திலிருந்து பாகிஸ்தான், மியான்மர், வங்கதேசம், இலங்கை, நேபாளம் ஆகிய அண்டை நாடுகளுடன் இந்தியாவின் தொடர்பு, இந்திய பொருளாதார வளர்ச்சியின் மாறுதல் நிலை, இந்தியாவில் சமூக இயக்கங்கள், உயர் பணமதிப்பிழப்பு ஆகிய பாடங்கள் நீக்கப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x