Last Updated : 09 Jul, 2020 08:01 AM

 

Published : 09 Jul 2020 08:01 AM
Last Updated : 09 Jul 2020 08:01 AM

ஜம்மு காஷ்மீரில் பாஜக தலைவர், அவரின் தந்தை, சகோதரரை சுட்டுக் கொலை செய்த தீவிரவாதிகள்: பாதுகாவலர்கள் மீது நடவடிக்கை

ஜம்மு காஷ்மீரின் பந்திப்போர் நகரில் நேற்று இரவு இரு சக்கர வாகனத்தில் வந்த தீவிரவாதிகள் சிலர் பாஜக மாவட்டத் தலைவர், அவரின் சகோதரர், தந்தை ஆகியோரைத் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றனர்.

இவர்களை பாதுகாக்கத் தவறிய அவர்களின் பாதுகாவலர்கள் 7 பேரை காஷ்மீர் நிர்வாகம் இடைநீக்கம் செய்து கைது செய்துள்ளது

தெற்கு காஷ்மீரின் முக்கியமான நகரமான பந்திப்போரின் மாவட்ட பாஜக தலைவராக இருந்தவர் வாசிம் பாரி. இவர் சொந்தமாக கடை நடத்தி வந்தார். வழக்கம் நேற்று கடையில் வாசிம்பாரி, அவரின் தந்தை பசீர் அகமது, சகோதரர் உமர் ஆகியோர் கடையில் இருந்தனர். அப்போது கடைக்கு அருகே இரு சக்கர வாகனத்தில் வந்த தீவிரவாதிகள் சிலர், சைலன்ஸர் பொருத்திய துப்பாக்கியால் மூன்றுபேரையும் சுட்டுவிட்டு தப்பிச் சென்றனர்.

பாஜக மாவட்டத் தலைவருக்கு பாதுகாப்புக்காக இருந்த போலஸீார் தீவிரவாதிகளைப் பிடிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த சம்பவம்நடந்த இடத்திலிருந்து 10 மீட்டர் தொலைவில்தான் போலீஸ் நிலையமும் இருந்தது.

இதையடுத்து, துப்பாக்கி்ச்சூட்டில் காயமடைந்த 3 பேரையும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு 3 பேரும் பலத்த காயமடைந்ததால், சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தனர்.

போலீஸ் டிஜிபி தில்பாக் சிங்: படம் ஏஎன்ஐ

இதுகுறித்து ஜம்மு காஷ்மீர் போலீ்ஸ் டிஜிபி தில்பாக் சிங் கூறுகையில் “ பாஜக தலைவர் பாரி அவரின் சகோதரர்,தந்தை ஆகியோர் கடையில் இருந்தபோது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டார்கள். இந்த சம்பவத்தில் பாரிக்கு பாதுகாப்புக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த போலீஸார் அவரை பாதுகாக்கத் தவறியதால் 7 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்

இந்த சம்பவத்தை காங்கிரஸ், பிடிபி கட்சிகள் கண்டித்துள்ளன. முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா ட்வி்ட்டரில் பதிவிட்ட இரங்கல் செய்தியில் “ பாஜக தலைவர் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டிக்கிறேன். அவரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கு என ஆழ்ந்த இரங்கல்கள். முக்கிய கட்சிகளின் தலைவர்கள் மீது தொடர்ந்து நடத்தப்படும் இந்த தாக்குதல்கள் கண்டிக்கத்தக்கது” எனத் தெரிவித்தார்

ஜம்மு காஷ்மீர் மாநில பாஜக தலைவர் ரெய்னா கூறுகையில் “ பாரதமாதாவின் உண்மையான தொண்டர் வாசிம் பாரி. இந்த கோழைத்தனமான தாக்குதலை கண்டிக்கிறேன். இந்த தாக்குதலுக்கு காரணமான தீவிரவாதிகள் அனைவரையும் கொல்ல வேண்டும். இது தொடர்ந்து நடைபெறக்கூடாது. இந்த சம்பவம் குறித்து என்னிடம் பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா, பிரதமர் மோடி, அமித்ஷா அனைவரும் கேட்டறிந்தனர் ” எனத் தெரிவித்தார்

பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ஜம்முகாஷ்மீரின் பந்திபோராவில் கோழைத்தனமான தாக்குதலில் ஷேக் வாசிம்பாரி, அவரின் தந்தை,சகோதரரை இழந்துவிட்டோம். பாஜகவுக்கு இது மிகப்பெரிய இழப்பு. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவி்த்துக் கொள்கிறோம். துணிச்சல் மிகுந்தஅந்த குடும்பத்தினருக்கு ஆதரவாக பாஜக துணை நிற்கும். அவர்களின் தியாகம் வீண்போகாது” எனத் தெரிவித்தார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x