Last Updated : 08 Jul, 2020 08:06 PM

 

Published : 08 Jul 2020 08:06 PM
Last Updated : 08 Jul 2020 08:06 PM

30 கிலோ தங்கம் கடத்தல் வழக்கு: பினராயி விஜயன் பதவியை ராஜினாமா செய்து விசாரணையை எதிர்கொள்ள வேண்டும்: ஒன்றுசேர்ந்து குரல் கொடுக்கும் காங்கிரஸ், பாஜக 

கேரள முதல்வர் பினராயி விஜயன்: கோப்புப்படம்

திருவனந்தபுரம்

ஐக்கிய அரபு அமீரகத் தூதரகம் மூலம் 30 கிலோ தங்கம் கடத்தப்பட்ட விவகாரத்தில் முதல்வர் அலுவலகத்துக்கு தொடர்பு இருப்பதால், கேரள முதல்வர் பினராயி விஜயன் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என்று காங்கிரஸும் பாஜகவும் ஒன்றுசேர்ந்து வலியுறுத்தியுள்ளன.

திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதரகப் பெயரைப் பயன்படுத்தி தங்கம் கடத்தப்படுவதாகக் கிடைத்த தகவலையடுத்து, சுங்கத்துறை அதிகாரிகளுக்கு கடந்த ஜூன் மாதம் 30-ம் தேதி 30 கிலோ தங்கம் வைக்கப்பட்டிருந்த பார்சலைப் பறிமுதல் செய்தனர். இதன் சர்வதேச மதிப்பு ரூ.15 கோடி என்று தெரிவிக்கப்பட்டது.

இந்தப் பார்சலை வாங்குவதற்காக வந்திருந்த சஜித் என்பவரை சுங்கத்துறையினர் மற்றும் போலீஸார் கைது செய்தனர். அவரிடம் சுங்கத்துறையினர் விசாரித்தபோது, தூதரகத்தில் ஏற்கெனவே பணியாற்றியவரும், கேரள தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியில் இருப்பவருமான ஸ்வப்னா சுரேஷ் என்பவருக்குத் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இந்தத் தகவலையடுத்து, ஸ்வப்னாவை போலீஸார் கைது செய்யத் தேடி வருகின்றனர், ஆனால், ஸ்வப்னா தலைமறைவாக இருந்து வருகிறார்.

தேடப்பட்டுவரும் ஸ்வப்னா : கோப்புப் படம்

ஐ.டி.பிரிவின் நிர்வாகச் செயலாளராக இருந்துவரும் ஸ்வப்னா சுரேஷ், அந்தத் துறையின் செயலாளர் சிவசங்கரனுக்கு நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது.

தகவல் தொழில்நுட்பச் செயலாளராக இருக்கும் சிவசங்கரன், கேரள முதல்வர் பினராயி விஜயனின் தனிச்செயலாளராகவும் கூடுதலாகப் பதவி வகித்து வந்தார். இந்தப் புகார் எழுந்ததையடுத்து, இரு பதவியிலிருந்தும் சிவசங்கரனை கேரள அரசு நீக்கியது.

கேரள முதல்வரின் தனிப்பிரிவுச் செயலாளராக இருந்தவருக்கும், தங்கம் கடத்தலில் உதவிய பெண்ணுக்கும் தொடர்பு இருப்பதால், எதிர்க்கட்சிகள் முதல்வர் பினராயி விஜயனை நோக்கி போர்க்கொடி உயர்த்தியுள்ளன.

கேரள முதல்வர் அலுவலகத்துக்குத் தெரியாமல் இந்தக் கடத்தல் நடந்திருக்காது, அந்தப் பெண்ணும் பணியில் எவ்வாறு அமர்த்தப்பட்டார் என்று பாஜக, காங்கிரஸ் கட்சிகள் முதல்வர் பினராயி விஜயனுக்கு கேள்விகளை அடுக்கி குடைச்சல் கொடுத்து வருகின்றன.

எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ரமேஷ் சென்னிதலா, பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதி, தங்கம் கடத்தல் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். பாஜகவும் இதே கோரிக்கையை வலியுறுத்தியுள்ளது.

ரமேஷ் சென்னிதலா: கோப்புப்படம்

இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா நிருபர்களுக்கு இன்று பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், “தங்கம் கடத்தல் வழக்கில் முதல்வர் அலுவலகத்தின் மீதும் சந்தேகம் இருக்கிறது. ஆதலால், முதல்வர் பினராயி விஜயன் பதவியை ராஜினாமா செய்துவிட்டு விசாரணையை எதிர்கொள்ள வேண்டும். பினராயி விஜயன் பதவியை ராஜினாமா செய்யாவிட்டால் மாநிலம் முழுவதும் கரோனா கட்டுப்பாடுகளை மீறி காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும்.

தங்கம் கடத்தலில் தேடப்பட்டுவரும் பெண், முதல்வருக்குத் தெரிந்தவர் என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அதனால்தான் முதல்வருக்குக் கீழ்வரும் தகவல் தொழில்நுட்பத் துறையில் அந்தப் பெண் பணியமர்த்தப்பட்டுள்ளார். முன்னாள் தகவல் தொழில்நுட்பத் துறைச் செயலாளருக்கும், தேடப்படும் அந்தப் பெண்ணுக்கும் இடையே சட்டவிரோதமான தொடர்புகள் இருந்ததாகவும் ஊடகங்களில் தகவல்கள் தெரிவிக்கின்றன. மாநில அரசு ஒருங்கிணைந்து நடத்திய விண்வெளி மாநாட்டையும் இந்தப் பெண்தான் ஒருங்கிணைத்தார்.

அப்படி இருக்கும்போது இந்தப் பெண் நியமிக்கப்பட்டது தனக்குத் தெரியாது என்று முதல்வர் பினராயி விஜயன் எவ்வாறு கூற முடியும். இவ்வளவு பெரிய நிகழ்ச்சியை ஒருங்கிணைந்து நடத்திய அந்தப் பெண் தனக்கு யார் எனத் தெரியாது என எவ்வாறு முதல்வர் கூறுகிறார்” என ரமேஷ் சென்னிதலா கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கிடையே தங்கம் கடத்தல் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளதால், ஐக்கிய அரபு அமீரக அரசும் இது தொடர்பாக தூதரகத்தில் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது

பாஜக மாநிலத் தலைவர் சுரேந்திரன்

பாஜக மாநிலத் தலைவர் சுரேந்திரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், “தங்கம் கடத்தல் விவகாரத்தில் முதல்வர் அலுவலகத்துக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுவதால், முதல்வர் பினராயி விஜயன் பதவியை ராஜினாமா செய்துவிட்டு விசாரணையை எதிர்கொள்ள வேண்டும். தங்கம் கடத்தலில் முதல்வர் அலுவலகத்துக்கு இருக்கும் தொடர்பு குறித்து பினராயி விஜயன் விளக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

மேலும், காங்கிரஸின் கூட்டணியில் இருக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும், தங்கம் கடத்தல் விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும். இது இரு நாடுகளின் உறவுகள் தொடர்பான விவகாரம் என்று தெரிவித்துள்ளது.

இந்த விவகாரத்தில் முதல்வர் பினராயி விஜயன் அளித்த பேட்டியில், “தங்கம் கடத்தல் வழக்கில் சுங்கத்துறை விசாரணை நடத்திவருகிறது. இதில் மாநில அரசுக்கு என்ன பங்கு இருக்கிறது. அந்த பார்சல் ஐக்கிய அரபு அமீரகத் தூதரகத்துக்கு வந்துள்ளது. கேரள அரசுக்கு வரவில்லை. அப்படி இருக்கும் கேரள அரசு தங்கம் கடத்தலுக்கு எவ்வாறு பொறுப்பாக முடியும். மத்திய அரசுதான் விசாரணையை முடிவு செய்ய வேண்டுமே தவிர மாநில அரசு அல்ல. சுங்கத்துறைக்குத் தேவையான ஒத்துழைப்பை மாநில அரசு வழங்கும்.

இந்த விவகாரத்தில் முதல்வர் அலுவலகத்துக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு பொய்யானது. இதில் முதல்வர் அலுவலகத்தைக் கொண்டு வர முயற்சி நடக்கிறது. சுங்கத்துறை இணை ஆணையர் அளித்த பேட்டியில், அரசு சார்பில் எந்த அழுத்தமும் கொடுக்கப்படவி்ல்லை எனத் தெரிவித்துள்ளார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x