Last Updated : 08 Jul, 2020 07:32 PM

 

Published : 08 Jul 2020 07:32 PM
Last Updated : 08 Jul 2020 07:32 PM

கான்பூர் போலீஸ் படை வரும் தகவலை விகாஸ் துபேவிற்கு முன்னதாகக் கூறியதாக சவுபேபூரின் 2 ஆய்வாளர்கள் கைது

கடந்த ஜூன் 2 இரவு உ.பி. ரவுடியான விகாஸ் துபேயை பிடிக்கச் சென்ற கான்பூர் காவல்துறையின் 8 போலீஸார் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்கு காரணமாக தகவலை விகாஸிடம் முன்கூட்டியே கூறி உதவியதாக சவுபேபூரின் ஆய்வாளர் வினய் திவாரி, துணை ஆய்வாளர் கே.கே.சர்மா இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் நடந்த அன்று விகாஸ் துபேயை கைதுசெய்ய அப்பகுதி டிஎஸ்பியான தேவேந்திர மிஸ்ரா தலைமையில் பிக்ரு கிராமத்திற்கு ஒரு படை சென்றது. அப்போது, அங்கிருந்த விகாஸ் துபே மற்றும் அவரது கூட்டாளிகள் திடீர் என துப்பாக்கி குண்டுகள் பொழிந்தனர்.

இதனால், நிலைதடுமாறிய கான்பூர் போலீஸாரில் டிஎஸ்பி, இரண்டு துணை ஆய்வாளர் மற்றும் 5 காவலர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்களுடன் சென்றிருந்த சவுபேபூர் காவல்நிலைய ஆய்வாளரான வினய் திவாரி எந்த காயமும் இன்றி தப்பி இருந்தார்.

இதனால், அவர் மீது சந்தேகம் எழுந்து கான்பூர் மாவட்ட காவல்துறையால் வினய் திவாரி மறுதினம் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார். இவருடன் கே.கே.சர்மா உள்ளிட்ட 2 துணை ஆய்வாளர்களும், ஒரு காவலரும் பணியிடைநீக்கம் செய்து விசாரணைக்கு உள்ளாகி வந்தனர்.

இவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரங்களுடன் உறுதி செய்யப்பட்டதால் வினய் திவாரி மற்றும் கே.கே.சர்மா இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுடன் பணியிடைநீக்கம் செய்யப்பட்ட மற்ற இருவரிடமும் விசாரணை தொடர்கிறது.

இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ இணையத்திடம் கான்பூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரும் தமிழருமான பி.தினேஷ்குமார்.ஐபிஎஸ் கூறும்போது, ‘‘இவர்கள் முன்கூட்டியே அளித்த தகவலின் அடிப்படையில் கான்பூர் போலீஸ் படையினர் மீது விகாஸ் கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது.

இதனால் அவர்களில் 8 பேர் பலியாக இருவரும் விகாஸுக்கு அளித்த தகவல் காரணமாகி உள்ளது. இதுபோல், உ.பி. காவல்துறையின் உயிர்கள் பலியாகவும், பணிசெய்ய விடாமலும் தடுப்பது யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை தொடரும்.’’ எனத் தெரிவித்தார்.

இதனிடையே, சவுபேபூர் காவல்நிலையத்தின் 68 போலீஸாரும் கூண்டோடு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீதும் விகாஸுக்கு ஆதரவாக செயல்பட்டதாகப் புகார் எழுந்து விசாரணை நடைபெறுகிறது.

இதேபோல், நேற்று முன் தினம் சமூகவலைதளங்களில் டிஎஸ்பி தேவேந்திர மிஸ்ரா எழுதியதாக ஒரு கடிதம் வெளியாகி சர்ச்சை கிளம்பியது. இதில், விகாஸ் மீதான ஒரு புகாரில் அவர் கைதாகாத வகையில் ஆள்கடத்தல் பிரிவினை ஆய்வாளர் வினய் திவாரி நீக்கியதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த கடிதம் மீது உ.பி. காவல்துறையின் ஐஜியான லஷ்மி சிங் விசாரணை நடத்தி வருகிறார். அப்போது கான்பூர் மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த அனந்த் தேவ் தற்போது டிஐஜியாக பணி உயர்வு பெற்ற உ.பி. அதிரடிப் படையில் பணியாற்றுகிறார்.

இந்த புகாருக்கு பின் உ.பி. அதிரடிப் படையின் டிஐஜியான அனந்த தேவ் உ.பி.யின் பிஏசி சிறப்பு படையில் முராதாபாத்திற்கு அனுப்பப்பட்டு உள்ளார். இவர் மீதான விசாரணை அறிக்கை முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x