

கரோனாவை காரணம் காட்டி சிபிஎஸ்இ 30 சதவீத பாடங்களை குறைப்பதாக கூறி மதச்சார்பின்மை உள்ளிட்ட பாடங்களை நீக்க விட்டதாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார்.
கரோனா தொற்று அச்சத்தால் நாடு முழுவதும் மார்ச் 16-ம் தேதி அன்று பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் பொதுத்தேர்வுகளை மத்திய, மாநிலப் பள்ளிக் கல்வி வாரியங்கள் நடத்த இயலாத நிலை ஏற்பட்டது. இதனால் அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி அளிக்கப்பட்டு அவர்களின் முந்தைய மதிப்பெண்களை வைத்து மதிப்பீடு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
புதிய கல்வியாண்டான ஜூன் 1-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படவில்லை. கோவிட் பரவல் காலத்தில் ஏற்பட்டுள்ள கல்வி வேலை நாட்கள் குறைப்பால், பாடத்திட்டத்தைக் குறைக்க வேண்டும் என்று மாணவர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள் மத்தியில் கோரிக்கை எழுந்தது.
இதைத் தொடர்ந்து தனியார் பள்ளி வாரியமான சிஐஎஸ்சிஇ, 9 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான பாடத்திட்டத்தை 25 சதவீதம் குறைத்தது. இதைத் தொடர்ந்து சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை 30 சதவீதம் வரை குறைத்துள்ளதாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதற்கு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில் ‘‘கரோனாவை காரணம் காட்டி 30 சதவீத பாடம் குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் திட்டமிட்டு தங்களுக்கு தகுந்தவாறு பாஜக ஆதரவாளர்கள் இதனை பயன்படுத்திக் கொண்டனர்.
சிபிஎஸ்இ 9 மற்றும் 11-ம் வகுப்பு அரசியல் அறிவியல் (Political Science) பாடத்தில் இடம்பெற்றிருந்த கூட்டாட்சி (Federalism), குடியுரிமை (Citizenship), தேசியம் (Nationalism), மற்றும் மதச் சார்பின்மை (secularism) ஆகிய அத்தியாயங்கள் முழுமையாக நீக்கப்பட்டுள்ளன. அதுபோலவே பொருளாதாரத்திலும் முக்கிய பாடங்கள் நீக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு பிடிக்காத பாடங்களை கரோனாவை காரணம் காட்டி நீக்கி விட்டார்கள்.’’ எனக் கூறினார்.