Last Updated : 08 Jul, 2020 05:08 PM

 

Published : 08 Jul 2020 05:08 PM
Last Updated : 08 Jul 2020 05:08 PM

பொருளாதார சுனாமி வந்து கொண்டிருக்கிறது; சிறு, நடுத்தர நிறுவனங்கள் அழிகின்றன: ராகுல் காந்தி எச்சரிக்கை

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி : கோப்புப்படம்

புதுடெல்லி

சிறு, நடுத்தர நிறுவனங்கள் அழிந்து வருகின்றன. பெரு நிறுவனங்கள் அழுத்தத்தில் சிக்கியுள்ளன. கரோனா வைரஸைத் தொடர்ந்து பொருளாதார சுனாமி வந்து கொண்டிருக்கிறது என்று நான் முன்பே எச்சரித்தேன் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த கொண்டுவரப்பட்ட லாக்டவுனை மத்திய அரசு முறையாகப் பயன்படுத்தவில்லை என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்.

லாக்டவுன் காலத்தில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மூடப்பட்டதால் பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அவற்றுக்கு நிதியுதவி வழங்கி கைதூக்கிவிட வேண்டும் என்று மத்திய அரசைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்

லாக்டவுனை சரியான முறையில் பயன்படுத்தவில்லை என்றும், லாக்டவுனால் பொருளாதாரம் மோசமான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது என்றும் ராகுல் காந்தி குற்றம் சாட்டி வருகிறார்.

கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த கொண்டுவரப்பட்ட லாக்டவுனால் கரோனா வைரஸ் வளைகோட்டை சாய்ப்பதற்குப் பதிலாக, பொருளாதார வளர்ச்சி வளைகோட்டைச் சாய்த்துள்ளது என்று ராகுல் காந்தி விமர்சித்தார்.

ராகுல் காந்தி நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்து சிகாகோ பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டு மத்திய அரசின் கொள்கைகளை விமர்சித்துள்ளார்.

அதில், ''நகர்ப்புறங்களில் இருக்கும் குடும்பங்களைக் காட்டிலும், கிராமப்புறங்களில் இருக்கும் குடும்பங்கள் ஏழ்மையில் சென்றுவிட்டன. 10 குடும்பங்களில் 8 குடும்பங்களுக்கு லாக்டவுன் காலத்தில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது'' என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ராகுல் காந்தி இன்று தனது ட்விட்டர் பக்கத்தில், பொருளாதாரத்தில் மிகப்பெரிய சுனாமி வந்து கொண்டிருக்கிறது என்று மத்திய அரசை எச்சரித்துள்ளார்.

அவரின் ட்விட்டர் பதிவில், “சிறு, நடுத்தர நிறுவனங்கள் அழிந்துவிட்டன. பெரு நிறுவனங்கள் மிகப்பெரிய அழுத்தத்தில் சிக்கி இருக்கின்றன. வங்கிகளும் பெரும் இக்கட்டான சூழலில் இருக்கின்றன. வங்கிகளின் வாராக் கடன் அதிகரித்து வருவதை நான் ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தேன்.

கரோனா வைரஸைத் தொடர்ந்து, பொருளாதார சுனாமி வந்துகொண்டிருக்கிறது என்று சில மாதங்களுக்கு முன்பே எச்சரித்திருந்தேன். எனது எச்சரிக்கைகள் பாஜக அரசால் கேலி செய்யப்பட்டன. ஆனால், எனது வார்த்தையில் இருந்த உண்மையை அறிந்த ஊடகங்கள் நாட்டுக்கு எச்சரித்தன” எனத் தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பொருளாதார ஆய்வறிக்கையையும் இணைத்துள்ளார். அடுத்த நிதியாண்டில் நாட்டில் உள்ள முதல் 500 பெரிய தனியார் நிறுவனங்கள் பெரும் கடனில் சிக்கும், ரூ.1.67 லட்சம் கோடி வாராக் கடன் வங்கிகளுக்கு ஏற்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்றொரு ட்வீட்டில் ராகுல் காந்தி குறிப்பிடுகையில், “இந்த உலகம் தன்னைப் போன்றது என்று பிரதமர் மோடி நம்புகிறார். ஒவ்வொருவருக்கும் ஒரு விலை இருக்கும் என்று நினைக்கிறார் அல்லது மிரட்டி, பணிய வைக்க முடியும் என்று நினைக்கிறார்.

உண்மைக்காகப் போராடுபவர்களுக்கு ஒருபோதும் விலை இல்லை. அவர்களை மிரட்டிப் பணியவைக்க முடியாது என்பதை அவர் ஒருபோதும் புரிந்து கொள்ளமாட்டார்” எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x