Published : 08 Jul 2020 08:29 AM
Last Updated : 08 Jul 2020 08:29 AM

லடாக்கில் இரவு, பகலிலும் எந்தவித வானிலையிலும் தாக்குதல் நடத்தும் முழு ஆற்றலுடன் இந்திய விமானப்படை

இந்திய விமானப்படைக்கு சொந்தமான அப்பாச்சி ஹெலிகாப்டர். (கோப்புப் படம்)

புதுடெல்லி

லடாக்கில் எந்தவித வானிலை சூழலிலும் இரவு, பகலிலும் தாக்குதல் நடத்தும் ஆற்றல் தம்மிடம் இருப்பதை இந்திய விமானப்படை வெளிப்படுத்தி வருகிறது.

விமானப்படையில் புதிதாகசேர்க்கப்பட்ட அப்பாச்சி, சினூக்ஹெலிகாப்டர்கள் இந்திய விமானப்படையின் வல்லமையை அதிகரித்துள்ளன. அப்பாச்சி ரக ஹெலிகாப்டர், எதிரி பீரங்கிகளை தகர்க்கும் ஏவுகணை வசதி கொண்டது.

எம்ஐஜி- 29 போர் விமானங்கள், சுகோய்- 30 விமானங்கள், அப்பாச்சி ஏஎச் 64 இ ஹெலிகாப்டர்கள், சிஎச் 47எப் (ஐ) சினூக் பல்நோக்கு ஹெலிகாப்டர்கள் உள்ளிட்டவை மலைப் பகுதிகளில் இரவுநேரப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. எத்தகைய வானிலை சூழலாக இருந்தாலும், மலை, தரைஎன எந்த பரப்பாக இருந்தாலும் இரவு, பகல் என எப்போதைக்கும் தாக்குதல் நடத்தும் ஆற்றல் உள்ளதுஎன்று முன்னாள் விமானப்படை தளபதி பாலி எச் மேஜர் கூறினார்.

விமானப்படை முன்னாள் வைஸ்மார்ஷல் மன்மோகன் பகதூர் கூறும்போது, "மலைப் பகுதிகளில் இரவு நேரத்தில் விமானங்களை இயக்குவது சவாலாக இருந்தது. இப்போது அவற்றை சமாளிக்கும் திறமையை பெற்றுள்ளோம். லடாக்பகுதியில் இரவு நேரப் பணியில் விமானம், ஹெலிகாப்டரை ஈடுபடுத்துவது தனது வீரர்களுக்கு பயிற்சி அளித்து திறனை மேம்படுத்தும் நோக்கமாகும். மலைப் பகுதிகளில் மலை நிழல்கள் மாயதோற்றத்தை தரும். மலைப்பகுதி பள்ளங்களின் ஆழத்தை சரியாககணிக்க முடியாது. இவையெல்லாம் மலைப் பகுதியில் எதிர்கொள்ளும் சவால்கள். அனுபவத்தின் மூலமாகவே இந்த இடர்களை வெல்ல முடியும்" என்றார்.

லடாக்கில் சீனா, இந்தியா இடையே எல்லை பிரச்சினை ஏற்பட்டு கடந்த 2 மாதமாக பதற்றம்நிலவுகிறது.

மே மாதத்திலிருந்து எல்லையில் பதற்றம் தொடங்கியதிலிருந்தே இந்திய விமானப்படை முக்கியபணியாற்றி வருகிறது. அதனிடம்உள்ள சி-17 குளோப் மாஸ்டர் IIIபோக்குவரத்து விமானம் வீரர்களையும் பீரங்கிகளையும் தரைப்படை போர் வாகனங்களையும் எல்லைப்பகுதியில் கொண்டுபோய் சேர்த்தது.

இந்நிலையில், பேச்சுவார்த்தைக்கு பிறகு கிழக்கு கல்வான் பள்ளத்தாக்கில் மோதல் நடைபெற்ற ‘பி14’ பகுதியில் இருந்துசீன ராணுவ வீரர்கள் சுமார் 2 கி.மீ.தொலைவுக்கு பின்வாங்கியுள்ளனர். மேலும் ஹாட் ஸ்பிரிங்ஸின் ‘17ஏ’ பகுதியில் இருந்தும் சீன வீரர்கள் வாபஸ் பெறப்பட்டுள்ளனர். இரு பகுதிகளிலும் சீன ராணுவத்தால் அமைக்கப்பட்டிருந்த கூடாரங்களும் அகற்றப்பட்டுள்ளன.

இதுகுறித்து இந்திய ராணுவ வட்டாரங்கள் கூறும்போது, ‘‘கடந்த30-ம் தேதி இரு நாடுகளின் ராணுவ உயரதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் 2.5 கி.மீ. முதல் 3 கி.மீ. வரை பரஸ்பரம் படைகளை வாபஸ் பெற முடிவு எடுக்கப்பட்டது. முதல்கட்டமாக சீன ராணுவ வீரர்கள் 2 கி.மீ. தொலைவுக்கு பின்வாங்கியுள்ளனர். சீன ராணு வம் பின்வாங்கி சென்றுவிட்டு மீண்டும் அத்துமீறுவது வழக்கமாக உள்ளது. எனவே, எல்லைப் பகுதியை தொடர்ந்து கண்காணிக்க திட்டமிட்டுள்ளோம்’’ என்று தெரிவித்தன.

சீன ராணுவம் வெளியேறும் பணி அடுத்த சில நாட்களில் முடியும்

கிழக்கு லடாக்கில் தாக்குதலுக்கு பிறகு இருநாட்டு ராணுவ அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் சில உடன்பாடுகள் ஏற்பட்டன. அதன்படி நேற்று முன்தினம் முதல் கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் இருந்து சீன ராணுவம் தனது படைகளை வாபஸ் பெறத் தொடங்கியது. அதுபோல, லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் அமைத்திருந்த ராணுவ முகாம்களையும் சீனா அப்புறப்படுத்தத் தொடங்கியுள்ளது. இரு நாட்டு ராணுவ வீரா்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்ட இடத்தில் இருந்து 2 கி.மீ. தூரம் வரை சீனா பின்வாங்கும் என்று தெரிகிறது. ஹாட்ஸ்பிரிங்ஸ், கோக்ரா பகுதியில் உள்ள படைகளை அடுத்த சில நாட்களுக்குள் சீன ராணுவம் வாபஸ் பெறும் எனத் தெரிகிறது.ராணுவ வட்டாரங்கள் கூறும்போது, “தற்போது சீன ராணுவம் கூடாரம் அமைத்த இடத்திலிருந்து ஒன்று முதல் 1.5 கிலோமீட்டர் தூரம் வரை அந்த ராணுவம் பின்வாங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல ஹாட்ஸ்பிரிங்ஸ், கோக்ரா பகுதியிலிருந்து ராணுவத் துருப்புகள் வாபஸ் பெறுவது அடுத்த சில நாட்களில் முடியும். உண்மையான எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியை இரு நாடுகளும் மதிக்க வேண்டும் என்று சீனாவுடன் நடத்திய பேச்சுவார்த்தையின்போது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் வலியுறுத்தினார். இந்திய ராணுவமும் ஒன்று முதல் 2 கிலோ மீட்டர்
வரை ராணுவப் படைகளை வாபஸ் பெறச் செய்துள்ளது” என்று தெரிவித்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x