Published : 06 Jul 2020 09:46 PM
Last Updated : 06 Jul 2020 09:46 PM

பல்கலைக்கழக இறுதி செமஸ்டர் தேர்வுகளைக் கட்டாயம் நடத்தவேண்டும்: மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம்

புதுடெல்லி

கரோனா தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகளை நடத்தலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் மத்திய உயர் கல்வித்துறைச் செயலருக்குக் கடிதம் எழுதியுள்ளது. அதில் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளைக் கட்டாயம் நடத்த வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் இறுதியில் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டன. தொடர்ந்து நோய்த்தொற்றின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படாமல் இருக்கின்றன. பல்கலைக்கழக மானியக்குழு இது தொடர்பாக சில வழிமுறைகளை அந்தந்த மாநில அரசுகள் பின்பற்ற அறிவுறுத்தியும் இருக்கிறது.

தமிழகத்தில் கரோனா நோய்த்தொற்றின் காரணமாக உயர்கல்வித் துறையின் கீழ் உள்ள பல்கலைக்கழகங்கள் செமஸ்டர் தேர்வுகளை நடத்தும் நிலையில் இல்லை. செமஸ்டர் தேர்வுகளை நடத்துவது தொடர்பாக அந்தந்த மாநிலப் பல்கலைக்கழகங்கள் முடிவு எடுக்கலாம் என்று பல்கலைக்கழக மானியக்குழு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் செமஸ்டர் தேர்வு நடத்துவது இப்போது சாத்தியப்படுமா? அப்படி இருந்தால் எவ்வாறு தேர்வுகள் நடத்துவது? என்பது குறித்து ஆராய்ந்து முடிவெடுக்க, உயர்கல்வி துறை முதன்மைச் செயலாளர் அபூர்வா தலைமையில் 11 பேர் கொண்ட குழுவை அமைத்து அரசு கடந்த 2 நாட்களுக்கு முன் உத்தரவு பிறப்பித்தது.

இந்தக் குழுவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை முதன்மைச் செயலாளர், தமிழ் மேம்பாடு மற்றும் தகவல்துறை செயலாளர், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம், சென்னை அண்ணா பல்கலைக்கழகம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் துணைவேந்தர்கள் ஆகியோர் உறுப்பினர்களாகவும், தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் கமிஷனர் ஒருங்கிணைப்பாளராகவும் உள்ளனர்.

பல்கலைக்கழக மானியக்குழு செமஸ்டர் தேர்வுகளை நடத்துவது தொடர்பாக வழங்கியுள்ள வழிகாட்டுதல்களின் அடிப்படையில், இந்தக் குழு பரிந்துரைகளை அளிக்கக் கேட்டுக் கொள்ளப்பட்டு இருந்தது.

இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் திடீரென ஒரு கடிதத்தை மத்திய உயர்கல்விச் செயலருக்கு அனுப்பியுள்ளது.

இது தொடர்பாக எழுதிய கடிதத்தில், “பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் தேர்வுகளை நடத்த இன்று மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. பல்கலைக்கழகங்களுக்கான தேர்வுகள் மற்றும் கல்வி நாட்காட்டி குறித்த பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) வழிகாட்டுதல்களின்படி பல்கலைக்கழக இறுதிக் காலத் தேர்வுகள் (final Term Examinations) மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிலையான இயக்க நடைமுறைப் (SOP) படி கட்டாயமாக நடத்தப்பட வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்து அறிவிப்பு வெளியிட்டாலும், தமிழகத்தில் தேர்வு நடத்துவது குறித்து தமிழக அரசு அமைத்துள்ள 11 நிபுணர் குழுவே இறுதி முடிவெடுத்து அறிவிக்கும் எனத் தெரிகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x