

கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட விகிதம் தேசிய அளவில் 6.73 சதவீதமாக இருப்பதாகவும் சில மாநிலங்களில் நாட்டின் சராசரியை விடவும் குறைவாக விகித அளவிலேயே இருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:
நமது நாட்டில் கொவிட்-19 பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக, மத்திய அரசு, மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுடன் இணைந்து ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, பரிசோதனை எண்ணிக்கையை அதிகப்படுத்தவும், தொற்றுள்ளவரின் தொடர்புகளைக் கண்டறியவும், தொற்று உறுதிப்படுத்தப்பட்டவருக்கு உரிய காலத்தில் சிகிச்சை அளிக்கவும் மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது.
பரிசோதனை திறன்களை, கணிசமாக மேம்படுத்துவதற்கும், மாநிலங்களுக்கு உதவியும் வருகிறது.
இதன் விளைவாக, நமது நாட்டில் கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் தேசிய விகிதம் 6.73 விழுக்காடாக உள்ளது. 2020 ஜூலை 5-ம் தேதியன்று நிலவரப்படி, இந்த தேசிய விகிதத்திற்கும் குறைவாக, சில மாநிலங்களில், தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் விகிதம் இருக்கிறது.
தேசிய அளவில் 6.73 சதவீதமாக உள்ளது.
மற்ற மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள்:
புதுச்சேரி 5.55
சண்டிகர் 4.36
அசாம் 2.84
திரிபுரா 2.72
கர்நாடகா 2.64
ராஜஸ்தான் 2.51
கோவா 2.5
பஞ்சாப் 1.92
டெல்லியில் மத்திய அரசு, யூனியன் பிரதேச அரசுடன் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கைகளால் பரிசோதனைகளின் எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட்டுள்ளது.
புதிய விரைவுபடுத்தப்பட்ட ஆன்டிஜென் பாயின்ட் – ஆஃப் – கேர் (பிஓசி) பரிசோதனைகளுடன் ஆர்டி–பிசிஆர் பரிசோதனைகளால் சுமார் 30 நிமிடத்தில் முடிவு தெரிந்துவிடுகிறது.
மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளால் நாள் ஒன்றுக்கு பரிசோதிக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 5,481இலிருந்து (1-5, ஜூன் 2020) 18,766 ஆக (1-5, ஜூலை 2020) அதிகரித்துள்ளது. டெல்லியில் பரிசோதனைகளின் எண்ணிக்கை கணிசமாகக் கூட்டப்பட்டிருக்கும் நிலையிலும், கடந்த 3 வாரங்களாக தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் விகிதம், 30 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக குறைந்துள்ளது.
இவ்வாறு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.