

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றுக்கான பரிசோதனை ஒரு கோடியை கடந்துள்ளது என்று ஐசிஎம்ஆர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
கரோனா வைரஸ் இன்றைய நிலவரப்படி கடந்த 24 மணிநேரத்தில் 24 ஆயிரத்து 248 பேர் பாதிக்கப்பட்டுள்ளதில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7 லட்சத்தை நெருங்கியுள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கையும் 19 ஆயிரத்து 693 ஆக அதிகரி்த்துள்ளது.
கடந்த சில வாரங்களாகவே கரோனா வைரஸ் பரிசோதனை அளவை நாள்தோறும் 2 லட்சம் அளவுக்கு அதிகப்படுத்தியுள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்திருந்தது. இந்த பரிசோதனை எண்ணிக்கை தற்போது ஒரு கோடியைக் கடந்துள்ளது
இதுகுறித்து ஐசிஎம்ஆர் மூத்த அறிவியல் விஞ்ஞானி, ஊடக ஒருங்கிணைப்பாளர் லோகேஷ் சர்மா கூறியதாவது:
“ திங்கள்கிழமை காலை 11 மணி வரை ஒட்டுமொத்தமாக இந்தியாவில் ஒரு கோடியே ஆயிரத்து 101 மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டுள்ளன. அதாவது, திங்கள்கிழமை மட்டும் ஒரு லட்சத்து 80 ஆயிரத்து 596 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை கரோனா பரிசோதனை எண்ணி்க்கை ஒரு கோடியைக் கடந்துள்ளது.
தற்போது அரசின் வசம் 788 கரோனா பரிசோதனை ஆய்வகங்களும், தனியாரிடம் 317 ஆய்வகங்களும் என மொத்தம் 1,105 ஆய்கவகங்கள் உள்ளன. நாள்தோறும் கரோனா பரிசோதனை செய்யும் அளவையும் படிப்படியாக அதிகரித்து வருகிறோம்.
கடந்த 14 நாட்களாக தொடர்ந்து நாள்தோறும் 2 லட்சம் பரிசோதனைகள் செய்துள்ளோம். கடந்த 1-ம் தேதி 90 லட்சத்தை எட்டிய நிலையில் அடுத்த 5 நாட்களில் ஒரு கோடியை அடைந்துள்ளோம்
கடந்த மே 25-ம் தேதி நிலவரப்படி நாள்தோறும் 1.50 லட்சம் பரிசோதனைகள் செய்த நிலையில், தற்போது நாள்தோறும் 3 லட்சம் பரிசோதனைகள் செய்யும் அளவுக்கு முன்னேறியுள்ளோம்.
லாக்டவுன் தொடங்கும் போது புனேயில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்திடம் கரோனா பரிசோதனை செய்யும் ஒரு ஆய்வகம் மட்டுமே இருந்தது. தற்போது 100 ஆய்வகங்களை உருவாக்கியுள்ளது.
சுகதாரத்துறை கட்டமைப்பை வலுப்படுத்தவும், மேம்படுத்தவும் மத்திய அரசு தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.
தகுதியான மருத்துவர்களைக் கொண்டு மக்களுக்கு அதிகமான அளவில் பரிசோதனையை மேற்கொள்ளுங்கள் என்று மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அனைத்து பரிசோதனைகளும் ஐசிஎம்ஆர் பரிந்துரைத்த விதிமுறைகள் படியே நடக்கின்றன.
டெஸ்ட், ட்ராக், ட்ரீட்(பரிசோதனை, கண்காணிப்பு, சிகிச்சை) ஆகிய மூன்று டி அடிப்படையில் அனைத்து மாநிலங்களும் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம்
இவ்வாறு லோகேஷ் சர்மா தெரிவி்த்தார்