Published : 06 Jul 2020 08:26 AM
Last Updated : 06 Jul 2020 08:26 AM
குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் பாலியல் வன்கொடுமை குற்றவாளி ஒருவரிடமிருந்து ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கியதாக பெண் காவல் துணை ஆய்வாளர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
மேற்கு அகமதாபாத் மகளிர் காவல் நிலைய பொறுப்பு அதிகாரியாக ஸ்வேதா ஜடேஜா என்ற துணை ஆய்வாளர் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 2019-ல் கெனல் ஷா என்பவருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரித்து வந்தார்.
இந்நிலையில், கெனல் ஷா மீது சமூக விரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யாமல் இருக்க கடந்த பிப்ரவரியில் ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கியதாகவும் தற்போது மேலும் ரூ.15 லட்சம் தருமாறு வற்புறுத்தி வருவதாகவும் ஸ்வேதா மீது கெனல் ஷாவின் சகோதரர் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் ஸ்வேதா ஜடேஜா கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார். அவரை அகமதாபாத்தில் உள்ள அமர்வு நீதிமன்றம் ஒன்றில் போலீஸார் நேற்று முன்தினம் ஆஜர்படுத்தினர். அப்போது ஸ்வேதாவை 3 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி அனுமதி வழங்கினார்.
இது தொடர்பாக அரசு வழக்கறிஞர் கூறும்போது, “இடைத்தரகர் ஒருவர் மூலமாக ஸ்வேதா ரூ.20 லட்சத்தை பெற்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்த லஞ்சத் தொகையை போலீஸார் கைப்பற்ற வேண்டியுள்ளது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT