Last Updated : 05 Jul, 2020 01:56 PM

 

Published : 05 Jul 2020 01:56 PM
Last Updated : 05 Jul 2020 01:56 PM

ரவுடி விகாஸ் துபே விவகாரம்:  காவல் நிலையத்திலிருந்து சென்ற ஃபோன்கால்- போலீஸ் அதிகாரி ஒருவரே துபேயின் கையாள்

விகாஸ் துபேயின் கூட்டாளி தயா சங்கர் அக்னி ஹோத்ரி.

உத்தரப் பிரதேசத்தில் பயங்கர ரவுடி விகாஸ் துபேயை கைது செய்யப் போவதற்கு முன்பாக காவல்நிலையத்திலிருந்து அவருக்கு தொலைபேசி அழைப்பு சென்றதாகவும் இதனால் அவர் உஷாராகி தன் மற்றக் கூட்டாளிகளை ஒன்று சேர்க்க முடிந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து 8 போலீஸார் கொல்லப்பட்ட சம்பவம் நடந்ததாகத் தெரிகிறது. கல்யாண்பூரில் கைது செய்யப்பட்ட விகாஸ் துபேயின் கூட்டாளி தயா சங்கர் அக்னிஹோத்ரி கூறும்போது , கைது செய்யும் முன்பாக போலீஸ் நிலையத்திலிருந்து தொலைபேசி அழைப்பு விகாஸ் துபேவுக்குச் சென்றதாக தெரிவித்துள்ளார்.

“போலீஸ் விகாஸை கைது செய்ய வரும் முன் அவருக்கு காவல்நிலையத்திலிருந்து போன் வந்தது. இதனையடுத்தே 25-30 கூட்டாளிகளை வரவழைத்தார் விகாஸ். இதனையடுத்தே போலீஸார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

வீட்டினுள் நான் பதுங்கியிருந்ததால் என்கவுண்டர் சமயத்தில் என்ன நடந்தது என்று எனக்குத் தெரியவில்லை.” என்றார் தயா சங்கர் அக்னி ஹோத்ரி.

கடைசியாக கிடைத்த தகவல்களின் படி விகாஸ் துபே மத்தியப் பிரதேசம் அல்லது ராஜஸ்தானுக்குத் தப்பிச் சென்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இரு மாநில போலீஸார்களையும் உ.பி. போலீஸ் தொடர்பு கொண்டது. சம்பவம் நடந்து 55 மணி நேரங்கள் ஆகியும் உபி போலீஸ் விகாஸ் துபே பற்றி எந்த ஒரு துப்பும் கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.

கடந்த மார்ச் மாதம் உ.பியின் டாப் 25 கிரிமினல்கள் பட்டியலில் விகாஸ் துபேயின் பெயர் இல்லாத விசித்திரமும் நடந்துள்ளது.

இந்நிலையில் விகாஸ் துபேயுடன் தொடர்ந்து தொடர்பிலிருந்த 20 போலீஸார் பெயர் பட்டியலிடப்பட்டுள்ளது. இதில் 2 பேர் விகாஸ் துபேவுக்கு நெருக்கமானவர்கள் என்று போலீஸ் வட்டாரங்கள் ஏ.என்.ஐ. செய்தி ஏஜென்சிக்குத் தெரிவித்துள்ளனர்.

சவ்பேபூர் காவல்நிலைய அதிகாரி வினய் திவாரி துபேயைக் காப்பாற்றியிருக்கிறார் என்று சந்தேகிக்கப்படுகிறது. இவர் தொடர்ச்சியாக துபேயுடன் தொலைபேசியில் பேசியுள்ளார், துபே மீது எந்த ஒரு நடவடிக்கைக்கும் முட்டுக்கட்டை போட்டுக் கொண்டிருந்தார் என்று தெரிகிறது.

என்கவுண்டர் தினத்தன்று கூடுதல் போலீஸ் குறித்த நேரத்தில் சம்பவ இடத்துக்குச் செல்லாமல் தாமதிக்குமாறு இவர் செயல்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தேவேந்திர மிஸ்ரா என்ற உயரதிகாரி மூலம் துபேயைப் பிடிக்க தனக்கு நெருக்கடி அளிக்கப்படுவதாக வினை திவாரி, துபேயிடம் தெரிவிக்க தேவேந்திர மிஸ்ரா ஈவு இரக்கமில்லாமல் படுகொலை செய்யப்பட்ட சம்பவமும் நிகழ்ந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x