Published : 05 Jul 2020 08:39 AM
Last Updated : 05 Jul 2020 08:39 AM

ரயில்வேயில் ஆள்குறைப்பு செய்யப்பட மாட்டாது: வாரிய இயக்குநர் ஆனந்த் தகவல்

ரயில்வேயில் மண்டலங்களில் 50 சதவீத அளவுக்கு பணியாளர்களுடன் செயல்படுமாறும், புதிய பணியிடங்கள் நிரப்புவதை நிறுத்தி வைக்குமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

ஊழியர்களின் பணிகளை ஒருங்கிணைத்து பன்முகத் திறன் மிக்கபணியாளர்களை உருவாக்குவதற்கான வாய்ப்புகளை ரயில்வே நிர்வாகம் ஆராய்ந்து வருவதாக சமீபத்தில் செய்தி வெளியானது.

இதுகுறித்து ரயில்வே வாரியமனித வள பிரிவின் இயக்குநர் ஜெனரல் ஆனந்த் எஸ் காடி கூறியதாவது: தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப சில பணிகளின் தன்மைகளை மாற்ற வேண்டிய சூழல் உருவாகி உள்ளது. அதேசமயம் பணியாளர்களின் திறனை மறு ஆய்வு செய்து அதை மேம்படுத்த வேண்டிய கட்டாயமும் உருவாகி உள்ளது. இதன் காரணமாக வேலையிழப்பு ஏதும் ஏற்படாது. உரியவேலைக்கு உரிய பணியாளர்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதே தவிர ஆள்குறைப்பு நடவடிக்கை எடுக்கப்படமாட்டாது.

இந்தியாவிலேயே அதிகவேலை வாய்ப்பை அளித்துள்ள துறையாக ரயில்வே விளங்கும் என்பதில் ஒருபோதும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. அதேசமயம், பணியாளர்களின் திறன் மேம்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

அவசியம் அல்லாத, பாதுகாப்பு இல்லாத பணிகளை நிரப்புவதை விட கூடுதல் பாதுகாப்பு அளிக்கும் பணியிடங்களை நிரப்பவும், புதிய கட்டமைப்பு வசதிகளை உருவாக்கவும் ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அனைத்து பணியிடங்களுக்கான ஆள் எடுக்கும் நடவடிக்கை தொடர்ந்து நடைபெறும். ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட பணியிடங்களுக்கான ஆள் தேர்வு மற்றும், பணியாளர் நியமனம் எதுவும் பாதிக்கப்படாது என்றார்.

ரயில்வேயில் தற்போது 12,18,335 பணியாளர்கள் உள்ளனர். ரயில்வே நிர்வாகத்தின் மொத்த வருமானத்தில் 65% ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியத்துக்கு செலவிடப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x