Published : 04 Jul 2020 07:59 PM
Last Updated : 04 Jul 2020 07:59 PM

என்னை வடிவமைத்து வழிகாட்டிய குரு அத்வானி: வெங்கய்ய நாயுடு நெகிழ்ச்சி

கோப்புப் படம்

புதுடெல்லி

நாளை குருபூர்ணிமா கொண்டாடப்படுவதையொட்டி எனது நீண்ட வாழ்க்கைப் பயணத்தின் பல்வேறு காலகட்டங்களில் எனது கண்ணோட்டத்தையும், வாழ்க்கையையும் வடிவமைத்துக் கொள்ள உதவிய எல்.கே.அத்வானி உட்பட எனக்கு குருவாக விளங்கிய அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் ‘‘ எனது தொடக்ககால அரசியல் வாழ்வில் சுதந்திரப் போராட்ட வீரராகவும் முன்னணி அரசியல்வாதியாகவும் விளங்கிய மறைந்த தென்னட்டி விஸ்வநாதம் மற்றும் என் பிற்கால வாழ்வில் தன்னை வடிவமைத்த அத்வானி உள்ளிட்ட 58 குருமார்களிடம் இருந்து ஆதரவையும், ஆலோசனையையும் பெற்றுள்ளேன்’’ எனக் கூறியுள்ளார்

மேலும், தான் பிறந்த 15வது மாதத்திலேயே தாயை இழந்த நாயுடு தாத்தா பாட்டி இருவரையுமே முதல் குருக்களாகக் வெங்கய்ய நாயுடு குறிப்பிட்டுள்ளார். தனது பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழகக் காலகட்டங்களில் தன்னை வழிநடத்திய மீதி 56 ஆசிரியர்களையும் அவர்களின் பெயர் சொல்லி நினைவு கூர்ந்துள்ளார்.

இந்திய மரபில் குரு சிஷ்யப் பரம்பரையில் ஆளுமையை வளர்த்தல் உள்ளிட்ட சிஷ்யர்களின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கு குரு ஆற்றுகின்ற பங்களிப்புக்கு நன்றிகளைத் தெரிவித்துள்ள வெங்கய்ய நாயுடு தற்போதைய தொழில்நுட்ப யுகத்தில் தனிப்பட்ட கவனத்துடன் கல்வி கற்றுத் தருமாறு ஆசிரியர்களை வலியுறுத்தினார்.

சரியான மதிப்பீடுகள் மற்றும் கண்ணோட்டங்களுடன் முழுமையான தனி நபர்களை வளர்த்தெடுப்பதன் மூலம் தேசியக் கட்டுமானத்திலும் ஆசிரியர்கள் முக்கியமான பங்கு வகிக்கின்றனர் என்பதை அவர் வலியுறுத்தினார்.

இணையம் என்பது ஒருபோதும் குருவுக்கு மாற்றாக முடியாது என்பதை குடியரசுத் துணைத்தலைவர் வலியுறுத்தினார். ‘‘இணையம் உங்களுக்கு தகவலைத் தரலாம், ஆனால் ஆசிரியர் தான் அந்த தகவலைப் பகுத்தாய்ந்து மதிப்பீடு செய்யும் திறன்களைக் கற்றுத் தரமுடியும். இவை உயர்நிலைத் திறன்கள் ஆகும். இத்திறன்கள் சிரமமான காலகட்டங்களில் விஷயங்களை புரிந்து கொள்ள உதவும். குரு மட்டுமே நன்மதிப்புகள், மானுட அக்கறை, கருணை மற்றும் ஒழுக்கம் ஆகியவற்றை தனது சீடர்களிடம் வளர்த்தெடுக்கவும் அவர்களுக்கு சரியான பாதையைக் காட்டவும் முடியும்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

ராமகிருஷ்ண பரமஹம்சர் மற்றும் சுவாமி விவேகானந்தருக்கு இடையிலான குரு சிஷ்யர் உறவின் காலகட்டத்தை பெருமதிப்புடன் நாயுடு நினைவுகூர்ந்தார். சுவாமி விவேகானந்தர் ஆரம்பகால கட்டத்தில் பல்வேறுவிதமான கண்ணோட்டத்துடன் இருந்தார், ஆனால் காலம் செல்லச் செல்ல தன்னுடைய வாழ்வின் ஒவ்வொரு செயலும் தனது குருவால் நிகழ்வதாகவே உணர்ந்தார் என நாயுடு குறிப்பிட்டுள்ளார்.

அசதா மாதத்தின் முதல் பௌர்ணமி குருபவுர்ணமியாக கொண்டாடப்படுகிறது, குருமார்களுக்கு பயபக்தியுடன் நன்றியைத் தெரிவிக்கின்ற முக்கிய நிகழ்வாக இருக்கின்றது, இந்த தினத்தில் தான் வேதவியாசர், புத்த பெருமான் மற்றும் 24வது ஜெயின் தீர்த்தங்கரர் ஆகியோர் பிறந்துள்ளனர்,

இந்த நாளில் தான் சாரநாத்தில் புத்தர் தனது முதல் உபதேசத்தை வழங்கினார் என தெரிவித்துள்ளார்.

தங்களது வாழ்வின் பல்வேறு காலகட்டங்களில் குருக்கள் ஆற்றிய பங்கினை நினைவு கூர்ந்து, நாளை குருபூர்ணிமா தினத்தில் அவர்களுக்கு நன்றி தெரிவிக்குமாறு வெங்கய்யநாயுடு அனைவரையும் கேட்டுக் கொண்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x