Published : 04 Jul 2020 04:31 PM
Last Updated : 04 Jul 2020 04:31 PM

புத்தரின் வாழ்க்கையே முந்தைய நம்பிக்கைகளை சவாலாக எடுத்துக் கொண்டதுதான்: குடியரசு தலைவர் புகழாரம்

உலகம் முழுவதும் மனித உயிர்களையும், பொருளாதாரத்தையும் அழித்துக் கொண்டிருக்கும் பெருந்தொற்றுக்கு புத்தரின் போதனைகள் கலங்கரை விளக்கமாகத் திகழ்கிறது என குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் குறிப்பிட்டார்.

தர்ம சக்ரா தினத்தை ஒட்டி, குடியரசுத் தலைவர் மாளிகையில், சர்வதேச பௌத்தக் கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த மெய்நிகர் நிகழ்ச்சியில் குடியரசுதலைவர் உரையாற்றினார்.

உலகம் முழுவதும் மனித உயிர்களையும், பொருளாதாரத்தையும் பெருந்தொற்று அழித்துக் கொண்டிருக்கும் நிலையில், புத்தரின் போதனைகள் கலங்கரை விளக்கமாகத் திகழ்கின்றன என குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் கூறினார். மேலும் அவர் கூறியதாவது:

மக்கள் மகிழ்ச்சியைக் காண, பேராசை, வெறுப்புணர்வு, வன்முறை, பொறாமை மற்றும் பல தீய குணங்களைக் கைவிட வேண்டும் என்று புத்த பகவான் கேட்டுக்கொண்டார். இந்த போதனைக்கு மாறாக, கவலை ஏதுமற்ற வேட்டை உணர்வுடன் மனித குலம் அதே பழைய வன்முறையைக் கையாண்டு, இயற்கையை அவமதிக்கிறது. கொரோனா தொற்றின் வீரியம் குறையத் துவங்கும் போது, நம் முன்பு மிகத் தீவிரமான பருவநிலை மாற்றம் என்னும் சவால் இருக்கும் என்பதை நாம் அனைவரும் அறிவோம்.

இந்தியா தர்மம் தோன்றிய பூமி என்ற பெருமையைக் கொண்டது. இந்தியாவில், பௌத்தத்தை கம்பீரமான உண்மையின் புதிய வெளிப்பாடாக நாம் காண்கிறோம். புத்தபகவான் ஞானம் பெற்ற பின்னர் 40 ஆண்டுகளுக்கு மேலாக, அவர் போதித்த நன்னெறிகள் அனைத்தும், இந்தியாவின் பாரம்பரியம், ஆன்மிகப் பன்முகத்தன்மை, தாராள அறிவுமயமாக்கம் ஆகிய வழிகளிலேயே இருந்தது. நவீன யுகத்தில், மகாத்மா காந்தி, பாபாசாகிப் அம்பேத்கர் ஆகிய இரண்டு மிகச்சிறந்த இந்தியர்கள், புத்தரின் பொன்மொழிகளால் ஈர்க்கப்பட்டு, நாட்டின் தலைவிதிக்கு வடிவம் கொடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.

அவர்களது காலடித் தடத்தில், உன்னதமான பாதையில் செல்லுமாறு புத்தர் விடுத்த அழைப்பை ஏற்று நாம் அதன்படி நடக்க முயல வேண்டும் என்று குடியரசுத் தலைவர் வலியுறுத்தினார். குறுகிய காலத்திலும், நீண்ட நெடுங்காலத்திலும் உலகம் பெரும் பாதிப்பைக் கண்டு வருகிறது.

தீவிர அழுத்தம் காரணமாக ஏற்படும் கொடுஞ் செயல்களில் இருந்து தப்பிக்க புத்தபகவானைச் சரணடைந்த ஏராளமான மன்னர்கள் மற்றும் செல்வந்தர்களின் கதைகளை நாம் கேட்டிருக்கிறோம். புத்தரின் வாழ்க்கையே முந்தைய நம்பிக்கைகளை சவாலாக எடுத்துக் கொண்டதுதான். ஏனெனில், இந்த முறையற்ற உலகத்தின் மத்தியில் துன்பங்களிலிருந்து விடுபடும் வழியைக் காண முடியும் என அவர் நம்பினார்.

இவ்வாறு குடியரசு தலைவர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x