Published : 04 Jul 2020 03:54 PM
Last Updated : 04 Jul 2020 03:54 PM

தன்வந்திரி ரதம்; கரோனா அல்லாத நோய்களுக்கு நேரில் சென்று மருத்துவ சேவை: அகமதாபாத் மாநகராட்சி நடவடிக்கை

கரோனா பெருந்தொற்று காலகட்டத்தில், அகமதாபாத் மாநகராட்சி தன்வந்திரி ரதம் என்ற பெயரில் நடமாடும் வேன் மூலமாக நகரத்தில் உள்ள மக்களின் வசிப்பிடங்களுக்கே சென்று பிற நோய்களுக்கான அத்தியாவசிய சிகிச்சை வழங்கும் நடவடிக்கையை தொடங்கியுள்ளது.

இந்த நடமாடும் வேன்களில் அகமதாபாத் மாநகராட்சியின் நகர சுகாதார மையத்தில் இருந்து உள்ளூர் மருத்துவ அதிகாரியும் அவருடன் ஒரு ஆயஷ் மருத்துவர், துணைமருத்துவப் பணியாளர் மற்றும் செவிலியரும் இருப்பார்கள். இந்த வேன்கள் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று கோவிட் அல்லாத இன்றியமையாத மருத்துவப் பராமரிப்பு தொடர்பான ஓபிடி சேவைகளை வழங்கும்.

அகமதாபாத் நகரம் முழுவதும் உள்ள மக்களுக்கு அவர்களின் இருப்பிடங்களுக்கே சென்று மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்படும். இந்த நடமாடும் மருத்துவ வேன்களில் ஆயுர்வேதம், ஹோமியோபதி மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய மருந்துகள், விட்டமின் மாத்திரைகள், அடிப்படை பரிசோதனை உபகரணங்கள் மற்றும் பல்ஸ் ஆக்ஸிமீட்டர் ஆகியன இருக்கும்.

பல்வேறு காரணங்களுக்காக மருத்துவமனைக்கு வந்து புறநோயாளிகள் சேவைகளைப் பெற முடியாத மக்களைச் சென்றடைந்து மருத்துவப் பராமரிப்புச் சேவைகளை வழங்குவதோடு இந்த தன்வந்திரி ரதம் மருத்துவமனை சிகிச்சை தேவைப்படுகின்றவர்கள் அல்லது உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற வேண்டியவர்களை அடையாளம் கண்டறிந்து அவர்களுக்கு உதவி செய்வதோடு இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்கள் சரியான காலத்தில் மருத்துவமனைக்குச் சென்று சேர்வதும் உறுதி செய்யப்படும்.

அகமதாபாத் மாநகராட்சி நகரம் முழுமைக்கும் 120 தன்வந்திரி ரதங்களை இயக்கி வருகிறது. இந்த தன்வந்திரி வேன்கள் இதுவரை 4.27 லட்சம் ஓபிடி பரிசோதனைகளை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளன. காய்ச்சல் இருந்த 20,143 நோயாளிகளுக்கும் இருமல், சளி மற்றும் மூக்கடைப்பால் பாதிக்கப்பட்டு இருந்த 74,048 நோயாளிகளுக்கும் வெற்றிகரமாக சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. தீவிர சுவாச மண்டலத் தொற்றுநோய் உள்ள 462 நோயாளிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக நகர சுகாதார மையங்களுக்கும், மருத்துவமனைகளுக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

இந்த தன்வந்திரி ரதங்களின் பயன்பாடானது கரோனா சிகிச்சைக்கும் குறிப்பிடத்தக்க அளவில் உதவியுள்ளது. சரியான நேரத்தில் அறிகுறிகள் வெளிப்படாது இருந்த நோயாளிகளைக் கண்டறியவும் இவை உதவி உள்ளன.

பருவமழை காலம் விரைவில் நெருங்கிக் கொண்டு இருப்பதாலும், கொசுவால் பரவும் நோய்கள் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாலும் 15 ஜுன் 2020 முதல் மலேரியா மற்றும் டெங்கு பரிசோதனைகளும் இந்த மொபைல் மருத்துவ வேன்களில் இணைக்கப்பட்டு அதன் சுகாதாரச் சேவைகள் விரிவாக்கப்பட்டு உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x