Last Updated : 04 Jul, 2020 02:23 PM

 

Published : 04 Jul 2020 02:23 PM
Last Updated : 04 Jul 2020 02:23 PM

பயங்கர தாதா விகாஸ் துபேயைப் பிடிக்க 25-க்கும் அதிகமான போலீஸ் தனிப்படை: உ.பி. தீவிரம்

உ.பி.யில் கொலை, கொள்ளை உட்பட பல பயங்கரக் குற்றங்களில் தேடப்பட்டு வரும் குற்றவாளி விகாஸ் துபேயை சுற்றி வளைக்க அம்மாநில அரசு 25க்கும் மேற்பட்ட போலீஸ் தனிப்படையை அமைத்துள்ளது.

விக்ரு கிராமத்தின் ஒரு வீட்டில் துபே இருப்பதாகக் கிடைத்த தகவலால் அவரை பிடிக்க கான்பூரின் 3 காவல்நிலையப் போலீஸார் சென்றிருந்தனர். இவர்களை கிராமத்தினுள் நடந்துவர வைக்க வேண்டி நுழைவுப் பகுதியில் பொக்லைன் வாகனத்தை திட்டமிட்டு நிறுத்தி தடுத்துள்ளார்.

இதனால், தம் வாகனங்களை நிறுத்திய போலீஸார் நடந்து சென்றபோது எதிர்பாராதவிதமாக இந்த துப்பாக்கி சூடு நடைபெற்றுள்ளது. இதற்காகவே காத்திருந்தது போல், விகாஸ் துபே தனது கும்பலுடன் வீடுகளின் மேற்புறங்களில் மறைந்திருந்து இயந்திரத் துப்பாக்கிகளால் சுட்டுள்ளனர்.

இதன் பிறகு அருகிலுள்ள சம்பல் காடுகளில் புகுந்து அனைவரும் தப்பி விட்டனர். எனினும், விகாஸ் கும்பலைச் சேர்ந்த 2 பேரும் நேற்று இரவு நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் கான்பூர் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

இதில், மேலும் ஏழு காவலர்கள் துப்பாக்கி குண்டுகளுடன் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். உ.பி. காவல்துறையின் பரிதாப பலிக்கு பின் விகாஸ் துபேயை பிடிக்க அம்மாவட்ட எஸ்எஸ்பியான பி.தினேஷ்குமார். ஐபிஎஸ் தலைமையில் ஐந்து சிறப்பு படைகளும், உபி அதிரடிப்படையினரும் இறங்கி உள்ளனர்.

கான்பூர் தலைமை காவல்துறை ஆய்வாளர் மோஹித் அகர்வால் சனிக்கிழமையன்று பிடிஐ-யிடம் கூறும்போது, “விகாஸ் துபே மற்றும் அவனது கூட்டாளிகளைப் பிடிக்க 25க்கும் மேற்பட்ட போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் படையினர் பல்வேறு மாவட்டங்களில் அவரைத் தேடி ரெய்டுகள் நடத்தி வருகின்றனர். பிற மாநிலங்களுக்கும் தனிப்படை அனுப்பப்பட்டுள்ளது” என்றார்.
கண்காணிப்பு குழுவின் சுமார் 500 மொபைல் போன்களை ஸ்கேன் செய்தனர். இதன் மூலம் துபே குறித்த தகவல்களை திரட்ட முயற்சி செய்து வருகின்றனர், துபே மீது 60 கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

உ.பி. போலீஸின் சிறப்பு அதிரடிப்படையும் களத்தில் இறக்கப்பட்டுள்ளன. மேலும் துபே பற்றிய தகவல்களை அளிப்போருக்கு ரூ.50,000 ரொக்கப்பரிசும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் தகவல் அளித்தவர்களின் அடையாளம் பாதுகாக்காப்படும் என்று போலீஸ் அதிகாரி அகர்வால் தெரிவித்தார்.

போலீஸார் வெள்ளி இரவு லக்னோவில் உள்ள கிருஷ்ணாநகர் பகுதி துபேயின் வீட்டில் ரெய்டு மேற்கொண்டனர்.

உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் வெள்ளிக்கிழமையன்று பலியான போலீஸார் குடும்பத்தினரைச் சந்திக்க கான்பூர் வந்தார். குடும்பத்துக்கு ரூ. 1கோடி நிவாரணம் அளிக்க அவர் அறிவித்துள்ளார். மேலும் குற்றம் செய்தவர்கள் தப்பிக்க முடியாது என்றும் பலியான போலீஸார் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி அளிக்கப்படும் என்றும் யோகி அறிவித்தார்.

“குற்றவாளிகள் விட்டுச் சென்ற ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. இந்த கொடூரமானக் கொலைகளுக்குக் காரணமான யாரும் தப்ப முடியாது. உயிர்த்தியாகம் செய்த போலீஸாரின் தியாகம் வீண் போகாது.

தங்கள் கடைமையைச் செய்யச் சென்ற போலீஸார் மீதான தாக்குதலை மன்னிக்க முடியாது. தைரியமான இந்த ஜவான்கள் கொல்லப்பட்டனர், இவர்களின் குடும்பத்துக்கு தகுந்த உதவிகளும் நிவாரணங்களும், வழங்கப்படுவதோடு, இந்தக் கொடூரத்தைச் செய்தவர்களைப் பிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்று தருவதன் மூலம் நீதி கிடைக்கவும் வழிசெய்யப்படும்” என்றார் முதல்வர் யோகி ஆதித்யநாத்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x