Published : 04 Jul 2020 08:17 AM
Last Updated : 04 Jul 2020 08:17 AM

சசிகலா அடைக்கப்பட்டுள்ள சிறையில் கைதி, போலீஸார் உட்பட 29 பேருக்கு கரோனா

பெங்களூரு மாநகராட்சி ஆணையர் பி.எச். அனில் குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த வாரம் பெங்களூருவில் பல்வேறு வழக்குகளில் கைதான 150 விசாரணை கைதிகளை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினோம். முன்னதாக, சுகாதாரத்துறையின் வழிகாட்டுதலின்படி 150 கைதிகளுக்கும் கரோனா வைரஸ் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதேபோல, பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் உள்ள 200-க்கும் மேற்பட்ட போலீஸாருக்கும் பரிசோதனை செய்யப்பட்டது.

இதில் கைதிகள் 150 பேரில் 23 விசாரணை கைதிகளுக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல, பரப்பன அக்ரஹாரா சிறையில் பணியாற்றும் 6 காவலர்களுக்கும் கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, அந்த 29 பேரையும் உடனடியாக சிறையில் இருந்து வெளியே கொண்டுவந்து, அரசின் தனிமைப்படுத்தும் முகாமில் பலத்த பாதுகாப்புடன் தங்க வைத்திருக்கிறோம்.

சிறையில் 29 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், அங்கு மற்ற கைதிகளுக்கும், காவல் துறை அதிகாரிகளுக்கும் அந்த நோய் பரவாமல் தடுக்கும் பணியில் மாநகராட்சி, சுகாதாரத் துறை ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்’’என்றார்.

இதுகுறித்து பரப்பன அக்ரஹாரா சிறை அதிகாரிகள் கூறும்போது, “இந்த சிறையில் காவலர்கள், கைதிகள் அனைவரும் முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது போன்றவை கண்டிப்பாக கடைப்பிடிக்கப்படுகிறது. தற்போது வெளியில் இருந்து புதிதாக சிறைக்கு வந்தவர்கள் மூலம் கரோனா பரவி இருக்கிறது. இதனால் சசிகலா உள்ளிட்ட அனைத்து கைதிகளும், போலீஸாரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x