Last Updated : 04 Jul, 2020 06:47 AM

 

Published : 04 Jul 2020 06:47 AM
Last Updated : 04 Jul 2020 06:47 AM

இந்தியாவுக்கு 300 டன் ஆயுதங்களை அனுப்பி வைத்தது அமெரிக்கா

வாஷிங்டன், நவ.2

சீனாவுக்கு எதிராகப் போரிட்டு வரும் இந்திய படைகளுக்காக அமெரிக்கா சார்பில் விமானங்களில் ஆயுதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. முதல் கட்டமாக மேற்கு ஜெர்மனியில் உள்ள அமெரிக்க விமானப் படை தளத்தில் இருந்து ஜெட் விமானங்கள் மூலம் ஆயுதங்கள் அனுப்பப்பட்டுள்ளன என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஜெர்மனியின் பிராங்க்பர்ட்டில் உள்ள அமெரிக்க விமானப் படை தளத்தில் இருந்து பல்வேறு வகையான ஆயுதங்களுடன் சி-135 சரக்கு விமானம் இந்தியாவுக்கு புறப்பட்டுள்ளது. இந்த விமானங்களில் சுமார் 300 டன்னுக்கும் அதிகமான ஆயுதங்கள் இந்தியாவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. அவசர தேவையின் அடிப்படையில் ஆயுதங்கள் அனுப்பப்பட்டிருக்கின்றன. இந்தியாவின் தேவைக்கு ஏற்ப தொடர்ந்து ஆயுதங்கள் அனுப்பி வைக்கப்படும்.

ஆயுத கொள்முதல் தொடர்பாக அமெரிக்காவில் இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. எவ்வாறு பணம் செலுத்துவது என்பது குறித்து இந்த பேச்சுவார்த்தையில் இறுதி முடிவு எடுக்கப்பட்டது. அமெரிக்க டாலரில் பணம் செலுத்த முடியாத நிலையில் இந்தியா உள்ளது. எனவே ரூபாய் அல்லது நீண்ட கால கடன் அடிப்படையில் பணம் செலுத்த அமெரிக்கா ஒப்புக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது.

இந்தியாவுக்கு தேவையான ஆயுதங்களை உடனுக்குடன் அனுப்புவது மட்டுமே அமெரிக்காவின் பிரதான குறிக்கோளாக உள்ளது. போர் விவகாரத்தில் இந்தியாவே இறுதி முடிவுகளை எடுக்கும். அமெரிக்கா சார்பில் படைகள் அனுப்பப்படாது. எனினும், ஆயுதங்களை கையாளுவது தொடர்பாக இந்திய வீரர்களுக்கு பயிற்சி தேவை என்றால் சிறப்பு நிபுணர்கள் அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று தெரிகிறது.

சீனாவின் அத்துமீறலுக்கு காரணம் என்ன என்பது குறித்து அமெரிக்க அரசு நிர்வாகம் ஆராய்ந்து வருகிறது. இந்தியா - சீனா போர் விவகாரத்தில் ரஷ்யாவின் பொய் முகம், அந்த நாட்டின் ஆசிய செய்தித்தொடர்பாளரின் பேட்டி மூலம் வெட்டவெளிச்சமாகி உள்ளது.

தெற்கு ஆசியாவுக்கான அமெரிக்க வெளியுறவுத் துறை துணைச் செயலாளர் பிலிப்ஸ் தல்பாட் கூறும்போது, ‘‘சீனா மற்றும் ரஷ்யாவின் செயல்பாடுகள் அதிர்ச்சி அளிக்கின்றன. இந்தியா மீது மட்டும் அல்ல, பல்வேறு ஆசிய நாடுகளிடமும் சீனா அத்துமீறுகிறது. சீனாவுக்கு பக்கபலமாக ரஷ்யா செயல்படுகிறது. இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள், லடாக் பகுதி எல்லைகளை கைப்பற்ற சீனா தீவிர முயற்சி செய்து வருகிறது. லடாக்கில் நடைபெறும் போர், குளிர்காலம் வரை நீடிக்கலாம். வடகிழக்கு மாநிலங்களில் நிலவும் கடும் குளிர் காரணமாக சீன ராணுவ நடவடிக்கைகள் குறைவாகவே உள்ளன. எனினும் இருமுனைகளிலும் சீனா மிகப்பெரிய தாக்குதலை நடத்தக்கூடும்" என்று தெரிவித்தார்.

அமெரிக்க அரசு வட்டாரங்கள் கூறும்போது,‘‘அணி சேரா கொள்கையை இந்தியா கைவிடவேண்டும். சீனா தொடுத்திருக்கும் போரால்இந்தியாவின் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. இதுவே அந்த நாட்டின் எதிர்கால வெளியுறவு கொள்கையை தீர்மானிக்கும் என்று கருதுகிறோம். இந்தியாவின் இப்போதைய நிலையை பயன்படுத்தி அந்த நாட்டை அமெரிக்க அணியில் சேர்க்க விரும்பவில்லை. இது அந்தநாட்டின் தனிப்பட்ட விருப்பமாகும்" என்று தெரிவித்தன.

ஏஎப்பி செய்தி நிறுவனம் அமெரிக்க வெளியுறவுத் துணைசெயலாளரிடம் தொலைபேசி வாயிலாக பேட்டி எடுத்துள்ளது. அந்த பேட்டியில் அவர் கூறும்போது, ‘‘இந்தியாவுக்கு நிபுணர் குழுவை அனுப்பும் திட்டமில்லை. சீன ராணுவத்தின் அத்துமீறல்களால் இந்தியாவும் இதர ஆசிய நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த சூழலைப் பயன்படுத்தி காஷ்மீரை ஆக்கிரமிக்க பாகிஸ்தான் முயற்சி செய்யும் என்று கருதவில்லை. இந்தியா - சீனா போர் தொடர்பாக பாகிஸ்தான் தரப்புடன் அமெரிக்க நிர்வாகம் தெளிவாக எடுத்துரைக்கிறது.இந்தியாவின் அவசர தேவையை கருத்தில் கொண்டு ஆயுத உதவி வழங்கப்படுகிறது" என்று தெரிவித்தார்.

(கடந்த 1962-ம் ஆண்டு இந்தியா - சீனா போரின் போது, என்ன நடந்தது என்பது குறித்து ‘தி இந்து’ ஆங்கில நாளிதழில் வெளியான செய்தியின் தமிழாக்கம்.)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x