Published : 08 Sep 2015 09:21 AM
Last Updated : 08 Sep 2015 09:21 AM

சிறப்பு அந்தஸ்து வழங்குவதாக பொய் வாக்குறுதி: பிரதமர் மோடி, சந்திரபாபு நாயுடு மீது போலீஸில் புகார் - ஆந்திராவில் காங்கிரஸார் நூதன போராட்டம்

ஆந்திராவில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் பிரதமர் மோடி, முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு மீது காங்கிரஸ் கட்சியினர் நேற்று போலீஸில் புகார் செய்து நூதன போராட்டம் நடத்தினர்.

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொய்யான வாக் குறுதியைக் கொடுத்து மக்களை ஏமாற்றியதாக அதில் குற்றம்சாட்டி உள்ளனர்.

சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி மாநிலம் முழுவதும் போராட்டம் வலுத்து வருகிறது. இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி இதுவரை 5 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். எதிர்க்கட்சிகள் சார்பில் 2 முறை முழு அடைப்பு போராட்டம் நடந்தது. காங்கிரஸ், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் பல் வேறு போராட்டங்கள் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், மாநில காங் கிரஸ் கட்சித் தலைவரும் முன் னாள் அமைச்சருமான ரகுவீரா ரெட்டி தலைமையில் நேற்று நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பல்வேறு நிலையங் களில் உள்ளூர் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பிரதமர் மோடி, மத் திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு மற்றும் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் மீது புகார் அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:

தேர்தல் பிரச்சாரத்தின்போது, மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் மோடி, முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் வெங்கய்ய நாயுடு ஆகியோர் வாக்குறுதி அளித்தனர். தேர்தலில் பாஜக, தெலுங்கு தேசம் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது.

ஆட்சிப் பொறுப்பேற்று சுமார் ஒன்றரை ஆண்டுகள் கடந்தும், இதுவரை சிறப்பு அந்தஸ்து குறித்து எந்தவித அறிவிப்பும் மத்திய அரசு வெளியிடவில்லை. இதன் மூலம் பொய்யான வாக்குறுதியை அளித்து மக்களை ஏமாற்றி உள்ளனர்.

இதனால் பலர் தங்களது எதிர்காலம் குறித்து கவலை அடைந்து தற்கொலை செய்து கொண்டனர். எனவே, மூவர் மீதும் மோசடி வழக்கு பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x