ஏப்ரலிலிருந்து 2 கோடி என்95 முகக்கவசம், 1.18 பிபிஇ ஆடைகள் மாநிலங்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டன: மத்திய அரசு தகவல்

பிரதமர் மோடி : கோப்புப்படம்
பிரதமர் மோடி : கோப்புப்படம்
Updated on
1 min read

கரோனா வைரஸ் காலத்தில் கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து மாநிலங்கள், யூனியன் பிரதேச நிர்வாகங்களுக்கு இதுவரை 2 கோடி என்95 முகக்கவசம், 1.18 பிபிஇ பாதுகாப்பு ஆடைகள், 11ஆயிரம் வெண்டிலேட்டர்கள் இவசமாக வழங்கப்பட்டுள்ளன என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியி்ட்ட அறிவிப்பி்ல் தெரிவிக்கப்பட்டுள்ளது

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:
கரோனா வைரஸ் பாதிப்பு தொடங்கியபின், கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து இப்போதுவரை மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் 2 கோடி என்95 முகக்கவசங்கள், மருத்துவர்கள், மருத்துவப் பணியாள்ரகள் அணியும் பிபிஇ கவச ஆடைகள் இலவசமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 11 ஆயிரம் வென்டிலேட்டர்கள் இதுவரை மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதில் 6,154 வென்டிலேட்டர்கள் மருத்துவமனையில் பயன்பாட்டில் உள்ளன. அதுமட்டுமல்லாமல் வென்டிலேட்டர்கள் பொருத்துதல் போன்றவற்றிலும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உதவி செய்து வருகிறது

நாடுமுழுவதும் கரோனா நோயாளிகளுக்காக 72,293 ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றை வலுப்படுத்தும் வகையில் 1.02 லட்சம் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதுதவிர சுகாதாரப் பணியாளர்களின் முன்னெச்சரிக்கைக்காக 6.12 கோடிக்கும் அதிகமான ஹைட்ராக்ஸிகுளோரகுயின் மாத்திரைகளும் மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
கரோனா வைரஸுக்கு எதிரான போராில், வைரஸைக் கட்டுப்படுத்தவும், தடுக்கவும், மாநில அரசுகளுடன் இணைந்து மத்திய அரசும் தொடர்ந்து பணியாற்றி வருகிறது. கரோனா வைரஸ் எதிரான போரில் மருத்துவக் கட்டமைப்பை மத்தியஅரசு வலுப்படுத்தி வருகிறது.

கரோனா வைரஸ் நாட்டில் பரவத் தொடங்கியபோது மருத்துவக் கட்டமைப்புக்குத் தேவையான பொருட்களை நாம் உள்நாட்டில் தயாரிக்கவில்லை, உலகளவில் பெரும் தேவை இருந்தது, வெளிநாட்டுச் சந்தையிலும் பற்றாக்குறை இருந்தது.

ஆனால், மத்திய ஜவுளித்துறை அமைச்சகம், சுகாதாரத்துறை அமைச்சகம், மருந்துத்துறை, மத்திய தொழில்துறை மற்றும் வர்த்தகத்துறை, பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சிப்பிரிவு உள்ளிட்ட பல்வேறு துறைகள் மற்றும் உள்நாட்டு தொழில்நிறுவனங்கள் ஆகியவற்றின் ஊக்கமான உற்பத்தி ஆகியவற்றால் இப்போது பெரும்பாலான மருத்துவப் பொருட்களை உள்நாட்டிலேயே தயாரிக்கிறோம்.

குறிப்பாத என்95 முகக்கவசம், வென்டிலேட்டர்கள், பிபிஇ ஆடைகள் போன்றவற்றை உள்நாட்டிலேயே தயாரிக்க உள்நாட்டு நிறுவனங்களுக்கு ஊக்கம் அளிக்கப்படுகிறது. தற்சார்பு பொருளாதாரம், மேக் இன் இந்தியா திட்டம் வலுப்படுத்தப்பட்டு வருகிறது

இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in