Last Updated : 02 Jul, 2020 10:53 AM

 

Published : 02 Jul 2020 10:53 AM
Last Updated : 02 Jul 2020 10:53 AM

பயணிகள் ரயில்போக்குவரத்தில் தனியாருக்கு அனுமதி: விண்ணப்பங்கள் கோரும் பணியைத் தொடங்கியது ரயில்வே அமைச்சகம்

109 வழித்தடங்களில் பயணிகள் ரயில் போக்குவரத்தில் தனியார் நிறுவனங்களை அனுமதிக்கும் திட்டத்தில் தகுதியான நிறுவனங்கள் விண்ணப்பம் செய்வதற்கான பணிகளை ரயில்வே அமைச்சகம் தொடங்கியுள்ளது.

ஒட்டுமொத்தமாக 109 வழித்தடங்களில், 151 நவீன ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இந்தத் திட்டத்தின் மதிப்பு ரூ.30 ஆயிரம் கோடியாகும். பயணிகள் ரயில் போக்குவரத்தில் தனியாரை அனுமதிக்கும் ரயில்வே அமைச்சகத்தின் முதல் திட்டம் இதுவாகும்.

ஏற்கெனவே கடந்த ஆண்டு ஐஆர்சிடிசிக்கு ரயில்களை இயக்க ரயில்வே அமைச்சகம் அனுமதியளித்தது. அதன்படி, லக்னோ-டெல்லி தேஜாஸ் எக்ஸ்பிரஸ், வாரணாசி-இந்தூர் வழியாக தி காசி மகால் எக்ஸ்பிரஸ், அகமதாபாத்-மும்பை தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ரயில் ஐஆர்சிடிசி மூலம் இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்னும் 109 வழித்தடங்களை அடையாளம் கண்டுள்ள ரயில்வே அதில் முழுமையாக தனியார் துறையை அனுமதிக்க உள்ளது. 151 நவீன ரயில்கள் இயக்கப்பட்ட உள்ளன. ஒவ்வொரு ரயிலிலும் 16 பெட்டிகள் கொண்டதாக இருக்கும்.

இதுகுறித்து ரயில்வே தரப்பில் கூறுகையில், “ரயில்வேயில் நவீன தொழில்நுட்பத்தைக் கொண்டு வர வேண்டும். பராமரிப்பைக் குறைக்க வேண்டும். வேலைவாய்ப்பை அதிகப்படுத்த வேண்டும். பாதுகாப்பை அதிகப்படுத்தி, உலகத் தரம்வாய்ந்த பயணத்தைப் பயணிகளுக்கு வழங்கவே இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

இந்தத் திட்டத்துக்கான நவீன ரயில்கள் அனைத்தும் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும். தனியார் துறையின் பொறுப்பு என்பது ரயில் சேவையை அளித்தல், நிதியளித்தல், கொள்முதல் செய்தல், பராமரித்தல் போன்றவை மட்டும்தான்.

ஒவ்வொரு ரயிலும் அதிகபட்சமாக மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் செல்லும் திறனுடையதாக வடிவமைக்கப்படும். இதன் மூலம் பயண நேரம் பெருவாரியாகக் குறையும். இந்த வழித்தடத்தில் செல்லும் ரயில்கள் இதுவரையில்லாத வேகத்தில் சென்று உரிய இடத்தைச் சேரும்.

இந்த ரயிலை இயக்கும் ஓட்டுநர் மற்றும் பாதுகாவலர்கள் ரயில்வே துறையினராக மட்டுமே இருப்பார்கள். ரயிலை நிர்வாகம் செய்யும் தனியார் துறையினர், குறித்த நேரத்தில் இயக்குநர், நம்பகத்தன்மையை ஏற்படுத்துதல், ரயிலைப் பராமரித்தல் போன்ற பணிகளைச் செய்ய வேண்டும். ரயிலை இயக்குதல், பராமரித்தல் போன்றவற்றுக்குத் தரம் வகுக்கப்பட்டு, அதன் அடிப்படையில் நடைபெறும்.

இந்தத் திட்டம் இரு பகுதிகளாச் செயல்படுத்தப்படும். முதலாவதாக தகுதியான தனியார் நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பம் கோரப்படும். 2-வதாக எவ்வாறு வருவாயைப் பெருக்குவார்கள், உருவாக்குவார்கள் என்பது குறித்து தனியார் நிறுவனங்களிடம் விசாரிக்கப்படும்.

கரோனா வைரஸ் பாதிப்புக்கு முன், ரயில்வே துறையில் ரயில்களை இயக்குவதற்காக ஆர்.கே.கேட்டரிங், அதானி போர்ட்ஸ், மேக் மை ட்ரிப், இண்டிகோ ஏர்லைன்ஸ், விஸ்தாரா, ஸ்பைஸ் ஜெட் ஆகியவை விருப்பம் தெரிவித்திருந்தன.

இது தவிர சர்வதேச நிறுவனங்களான அல்ஸ்டாம் ட்ரான்ஸ்போர்ட், பாம்பாரிடார், சீமன்ஸ் ஏஜி, மெக்குவாரி ஆகிய நிறுவனங்களும் விருப்பம் தெரிவித்து விண்ணப்பம் செய்திருந்தன.

இவ்வாறு தகவல்கள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x