Published : 02 Jul 2020 08:29 AM
Last Updated : 02 Jul 2020 08:29 AM

மணமான மறுநாளே உயிரிழந்த மாப்பிள்ளை: திருமணத்தில் பங்கேற்ற 111 பேருக்கு கரோனா

பாட்னா

பிஹார் மாநிலத்தில் திருமணமான மறுநாளே மாப்பிள்ளை உயிரிழந்துள்ளார். அவரது திருமண விழாவில் பங்கேற்ற 111 பேருக்குகரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவருக்கு பாட்னாவில் கடந்த மாதம் 15-ம் தேதி திருமணம் நடந்துள்ளது. டெல்லியை அடுத்த குருகிராமில் பொறியாளராக பணியாற்றிவந்த மணமகன், திருமணத்துக்காக அங்கிருந்து வந்துள்ளார்.

அப்போதே அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. திருமணத்தின்போது அவரது நிலை மோசமடைந்தது. கரோனா அறிகுறியான வயிற்றுப்போக்கு ஏற்பட்ட அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர் அவருக்கு மருந்து கொடுத்த குடும்பத்தினர், வலுக்கட்டாயமாக திருமணச் சடங்குகளில் ஈடுபடுத்தி உள்ளனர்.

இந்நிலையில், திருமணமான அடுத்த நாளே மாப்பிள்ளை உயிரிழந்துள்ளார். இதுகுறித்து பாட்னாமாவட்ட ஆட்சியர் ஸ்ரீ குமார் ரவிக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. ஆனால் அதிகாரிகள் வருவதற்கு முன்பே, உயிரிழந்த மாப்பிள்ளையின் உடலை அடக்கம் செய்துள்ளனர். இதனால் கரோனா பரிசோதனை செய்யமுடியாமல் போய்விட்டது. இந்நிலையில், மாப்பிள்ளையின் உறவினர்கள் சிலருக்கு கரோனா அறிகுறி தெரிந்ததால், பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில் 15 பேருக்கு கரோனா பாதிப்பு இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அந்த திருமணத்தில் பங்கேற்ற சுமார் 350 பேரை அடையாளம் கண்டு, தனிமைப்படுத்தி அவர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், 86 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியானது. இதனிடையே, 50 பேருக்குமேல் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்கக் கூடாது என்ற விதியைமீறியது குறித்து விசாரிக்க ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x