Published : 02 Jul 2020 08:23 AM
Last Updated : 02 Jul 2020 08:23 AM
தெலங்கானாவில் ஜூலை 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தலைநகர் ஹைதராபாத்தில் கரோனா தொற்று இப்போது வேகமாகப் பரவி வருகிறது. உயிரிழப்பு சதவீதமும் அதிகரித்து வருகிறது. ஹைதராபாத் தவிர மற்ற மாவட்டங்களில் கரோனா தொற்று மிகவும் குறைந்து விட்டதாக அரசு தெரிவித்தது. ஆனால், கரோனா பரிசோதனையை நிறுத்தியதால்தான் மற்ற மாவட்டங்களில்நோயாளிகள் எண்ணிக்கை குறைந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
இதுதொடர்பாக ஹைதராபாத் உயர் நீதிமன்றத்தில் சிலர் பொதுநல மனுக்களை தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்கள் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுக்களை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், “ஐசிஎம்ஆர் பரிந்துரைப்படி தினமும் கரோனா பரிசோதனை செய்து அதன் முடிவுகளை அறிவிக்க வேண்டும். ஆனால் கரோனா பரிசோதனையை நிறுத்துமாறு அனைத்து சுகாதார மையங்களுக்கும் ஆரம்ப சுகாதார இயக்குநர் கடிதம் எழுதியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இந்தக் குழப்பத்தால் ஊடகங்களிலும் தினமும் வெவ்வேறு விதமாக செய்திகள் வருகின்றன.
கடந்த 15 நாட்களில் எத்தனை பேருக்கு கரோனா சிகிச்சை அளிக்கப்பட்டது? எத்தனை பேர் குணமடைந்து வீடு திரும்பினர்? உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை எவ்வளவு? இதற்கான முழு விவரத்தையும் அரசு அளிக்க வேண்டும். வரும் 17-ம் தேதிக்குள் கரோனா பரிசோதனையை முழுமையாக மேற்கொள்ள வேண்டும். இல்லையேல், 20-ம் தேதி மாநில முதன்மைச் செயலாளர், மருத்துவ செயலாளர், ஹைதராபாத் மாநகர ஆணையர் உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT