Published : 01 Jul 2020 09:15 PM
Last Updated : 01 Jul 2020 09:15 PM

மலப்புரம் மாவட்டம் பொன்னானியில் 3 மடங்கு ஊரடங்கு: கேரள முதல்வர் பினராயி விஜயன் பேட்டி 

திருவனந்தபுரம்

நோய் பாதிப்பு அதிகம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட மலப்புரம் மாவட்டம் பொன்னானியில் மூன்று மடங்கு ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

கேரள முதல்வர் பினராயி விஜயன் புதன்கிழமை திருவனந்தபுரத்தில் நிருபர்களிடம் கூறியது:

''கேரளாவில் இன்று 151 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 132 பேர் நோயிலிருந்து குணமடைந்துள்ளனர். இன்று டாக்டர்கள் தினம் ஆகும். தற்போது உலகம் முழுவதும் வேகமாகப் பரவி வரும் கரோனா நோயைக் கட்டுப்படுத்தும் பணியில் டாக்டர்கள் தங்கள் உயிரையும் பணயம் வைத்து சிறப்பாகப் பணிபுரிந்து வருகின்றனர். தன்னலமில்லாத அவர்களின் பணி பாராட்டத்தக்கதாகும். வரும் நாட்களில் நோயின் தீவிரம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஆனாலும், இந்த நோயைக் கட்டுப்படுத்தும் பணியில் டாக்டர்கள் மிகவும் உறுதியுடன் இருப்பார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

கேரளாவில் நோயைக் கட்டுப்படுத்துவதில் டாக்டர்கள் மேற்கொண்டு வரும் பணிகளை நாம் மறக்கக்கூடாது. அவர்களின் தீவிர முயற்சியால்தான் கேரளாவில் மரண சதவீதத்தைக் குறைக்க முடிந்தது. கேரளாவில் நோய் வேகமாகப் பரவி வருகின்ற போதிலும் இதுவரை சமூகப் பரவல் ஏற்படவில்லை. இதற்கு டாக்டர்களின் தீவிர முயற்சிதான் காரணமாகும். இன்று நோய் பாதிக்கப்பட்டவர்களில் 86 பேர் வெளிநாடுகளில் இருந்தும், 51 பேர் வெளி மாநிலங்களில் இருந்தும் வந்தவர்கள் ஆவர். கரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்ததன் மூலம் 13 பேருக்கு இன்று நோய் பரவியுள்ளது.

கடந்த ஜூன் 27 ஆம் தேதி கோழிக்கோட்டில் தற்கொலை செய்த நடக்காவு பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவருக்கு கரோனோ இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று நோய் பாதிக்கப்பட்டவர்களில் 34 பேர் மலப்புரம் மாவட்டத்தையும், 27 பேர் கண்ணூர் மாவட்டத்தையும், 17 பேர் பாலக்காடு மாவட்டத்தையும், 16 பேர் திருச்சூர் மாவட்டத்தையும், 12 பேர் எர்ணாகுளம் மாவட்டத்தையும், 10 பேர் காசர்கோடு மாவட்டத்தையும், 8 பேர் ஆலப்புழா மாவட்டத்தையும், தலா 6 பேர் கோழிக்கோடு மற்றும் பத்தனம்திட்டா ஆகிய மாவட்டங்களையும், தலா 4 பேர் திருவனந்தபுரம் மற்றும் கோட்டயம் ஆகிய மாவட்டங்களையும், தலா 3 பேர் கொல்லம் மற்றும் வயநாடு ஆகிய மாவட்டங்களையும், ஒருவர் இடுக்கி மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள் ஆவர்.

இன்று நோய் குணமடைந்தவர்களில் 21 பேர் கொல்லம் மாவட்டத்தையும், தலா 16 பேர் திருச்சூர் மற்றும் காசர்கோடு ஆகிய மாவட்டங்களையும், 15 பேர் கோழிக்கோடு மாவட்டத்தையும், 13 பேர் கண்ணூர் மாவட்டத்தையும், 12 பேர் மலப்புரம் மாவட்டத்தையும், 11 பேர் பாலக்காடு மாவட்டத்தையும், 9 பேர் ஆலப்புழா மாவட்டத்தையும், 6 பேர் கோட்டயம் மாவட்டத்தையும், 5 பேர் பத்தனம்திட்டா மாவட்டத்தையும், 3 பேர் திருவனந்தபுரம் மாவட்டத்தையும், தலா 2 பேர் இடுக்கி மற்றும் வயநாடு ஆகிய மாவட்டங்களையும், ஒருவர் எர்ணாகுளம் மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள் ஆவர்.

கடந்த 24 மணி நேரத்தில் 6,564 பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. இதுவரை கேரளாவில் 4,593 பேருக்கு நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது பல்வேறு மருத்துவமனைகளில் 2,130 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கேரளாவில் பல்வேறு மாவட்டங்களில் 1,87, 219 பேர் கண்காணிப்பில் உள்ளனர். இவர்களில் 2,831 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் உள்ளனர். இன்று கரோனா அறிகுறிகளுடன் 290 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 1,81,780 பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. இதில் 4,042 பரிசோதனை முடிவுகள் இன்னும் வர உள்ளன.

இதுவரை சுகாதாரத் துறையினர், வெளிமாநிலத் தொழிலாளர்கள் மற்றும் சமூக நெருக்கமுள்ள 50,448 பேரிடம் பரிசோதனை நடத்தப்பட்டது. இந்தப் பரிசோதனையில் 48,448 பேருக்கு நோய் இல்லை எனத் தெரியவந்துள்ளது. கேரளாவில் தற்போது 124 நோய் தீவிரம் உள்ள பகுதிகள் உள்ளன.

நோய் பாதிப்பு அதிகம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட மலப்புரம் மாவட்டம் பொன்னானியில் மூன்று மடங்கு ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இங்கு போலீஸார் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இப்பகுதியில் வடக்கு மண்டல ஐஜி அசோக் யாதவ் தலைமையில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தற்போது கேரளாவில் அரசு மருத்துவமனையில் மட்டுமே கரோனா நோய்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் தனியார் மருத்துவமனைகளையும் சேர்த்துக்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

கேரளாவில் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது. இது சமூகப் பரவல் ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே முன்பை விட இப்போது நோய்த் தடுப்பு நடவடிக்கைகளில் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், வேறு நோய்கள் இருப்பவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு அவர்களைக் கண்காணிக்கத் தீர்மானிக்கபட்டுள்ளது.

இதுவரை கேரளாவுக்கு வெளிநாடுகளிலிருந்து 870 விமானங்களும், 3 கப்பல்களும் வந்துள்ளன. வெளிநாடுகளில் இருந்து இதுவரை கேரளாவுக்கு 1,43,147 பேர் வந்துள்ளனர். இவர்களில் 52 சதவீதம் பேரும் வேலை இழந்தவர்கள் ஆவர். 47,257 பேர் விசா காலாவதி முடிந்தவர்கள் ஆவர். மாநிலங்களுக்கு இடையே பயணம் செய்பவர்களுக்கு பாஸ் வாங்கத் தேவையில்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஆனால் கேரளா வருபவர்கள் 'கேரளா கோவிட் ஜாக்ரதா' என்ற இணையதளத்தில் கண்டிப்பாக முன்பதிவு செய்ய வேண்டும். கேரளா வருபவர்கள் தங்களது விவரங்களை இந்த இணையதளத்தில் முன்பதிவு செய்தால் மட்டுமே அவர்களுக்குக் கண்காணிப்பு தேவைப்படுகிறதா என்பது குறித்தும், மேலும் அவர்களது உடல்நிலை குறித்த விவரங்களையும் அறிந்துகொள்ள முடியும். மாணவர்களுக்கு லேப்டாப் வழங்க சிறப்புச் சலுகை அளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி கேரள அரசு நிதி நிறுவனத்தில் 30 மாதத்திற்கு மாதம் ரூ. 500 பணம் கட்ட வேண்டும். மூன்று மாதங்கள் பணம் கட்டினால் ரூ.15,000 மதிப்புள்ள லேப்டாப் வாங்க கடன் வழங்கப்படும். இந்த கடன் தொகைக்கான 4 சதவீத வட்டியை கேரள அரசு நிதி நிறுவனமும், 5 சதவீத வட்டியை கேரள அரசும் ஏற்றுக்கொள்ளும்''.

இவ்வாறு பினராயி விஜயன் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x