

பெங்களூருவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் 13-வது மாடியில் இருந்து விழுந்து இளம்பெண் ஒருவர் பலியானார். இது தற்கொலையா, கொலையா என போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மஹாராஷ்டிர மாநிலம் தானே-வைச் சேர்ந்த இஷா ஹன்டா (26), கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் மேனேஜராக வேலைக்கு சேர்ந்தார். பெங்களூரு பழைய விமான நிலைய சாலையில் உள்ள விடுதியில் தங்கி இருந்தார்.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணியளவில் சர்ஜாபுரம் அருகே யுள்ள ஒரு அடுக்குமாடி குடியி ருப்பின் 13-வது மாடியில் இருந்து இஷா ஹன்டா விழுந்தார். அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் இஷா இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து காவல் துறை துணை ஆணையர் ரோஹினி கடோச் கூறியதாவது:
இஷா உயிரிழந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் அவரது நண்பர்களோ, உறவினர்களோ யாரும் வசிக்கவில்லை என முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
தனக்கு சற்றும் தொடர்பில்லாத, ஆள் நடமாட்டம் குறைவான இந்தக் குடியிருப்புக்கு இஷா வந்தது ஏன் என விசாரித்து வருகிறோம்.
அந்தக் குடியிருப்பில் பொருத் தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை ஆய்வு செய்து வருகிறோம்.
மேலும் இஷாவின் செல் போனை ஆய்வு செய்ததில் அவரது கால் ரிஜிஸ்டர், எஸ்.எம்.எஸ்., வாட்ஸ் ஆப் உள்ளிட்ட தகவல்கள் அழிக்கப்பட்டுள்ளன.
தனிப்பட்ட பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணங்களுக்காக கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.