Last Updated : 01 Jul, 2020 10:35 AM

 

Published : 01 Jul 2020 10:35 AM
Last Updated : 01 Jul 2020 10:35 AM

தேர்வு நடத்தாமல் 49 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி: உ.பி. பல்கலைக்கழக குழு பரிந்துரையை ஏற்க யோகி அரசு முடிவு

உத்திரப்பிரதேசப் பல்கலைகழகங்களின் 49 லட்சம் மாணவர்களுக்கு இறுதித்தேர்வு நடத்தாமலே தேர்ச்சி பெறச்செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மீதான பல்கலைகழகக்குழு ஆலோசனையின் பரிந்துரையை முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசு ஏற்றுள்ளது.

கரோனா வைரஸ் பரவலால் அமலான தேசிய ஊரடங்கில் கல்வி நிலையங்களும் பாதிக்கப்பட்டன. இவை அனைத்தும் உ.பி.யிலும் மூடப்பட்டு அதன் பல பல்கலைகழகங்களின் மாணவர்களுக்கு இறுதிப்பருவத்தின் தேர்வு நடத்த முடியாமல் இருந்தது.

இதற்காக, ஆன்லைனில் தேர்வு நடத்தவும் உபியில் எதிர்ப்பு கிளம்பியது. இதன் மீது இறுதி முடிவு எடுக்கும் பொருட்டு முதல்வர் யோகி அரசு பேராசிரியர் என்.கே.தனேஜா என்பவர் தலைமையில் நால்வர் கொண்ட ஒரு ஆலோசனைக்குழு அமைத்தது.

மீரட்டின் சவுத்ரி சரண்சிங் பல்கலைகழகத்தின் துணைவேந்தராக பேராசிரியர் தனேஜா உள்ளார். இவரது பரிந்துரைகளை உ.பி.யின் 18 பல்கலைகழகங்கள் மற்றும் அதன் கீழ் செயல்படும் கல்லூரிகள் ஏற்பது என்றும் முடிவானது.

இந்த சூழலில், தனேஜா குழு தனது பரிந்துரைகளை உபியின் துணை முதல்வர் தினேஷ் சர்மாவிடம் நேற்று சமர்ப்பித்துள்ளது. இதில் பேராசிரியர் தனேஜா குழுவின் பரிந்துரையில் கூறியிருப்பதாவது:

மாநிலம் முழுவதிலும் கரோனா வைரஸ் வேகமாகப் பரவும் வாய்ப்புகள் உள்ளன. இந்த சூழலில் சமூகவிலகலுடன் தேர்வு நடத்துவது மிகவும் சிரமம். இதனால், மாணவர்களும், ஆசிரியர்களும் கரோனா தொற்றுக்கு உள்ளாகும் வாய்ப்புகள் உள்ளன.

எனவே, அனைத்து மாணவர்களையும் தேர்வின்றி தேர்ச்சி பெறவைக்க வேண்டும். இதன் மீதான ஆலோசனையில் நாட்டின் மற்ற மாநில அரசுகளின் பல்கலைழகங்கள் எடுத்த முடிவுகளும் கணக்கில் எடுக்கப்பட்டன. எனக் குறிப்பிட்டுள்ளது.

பேராசிரியர் தனேஜா குழுவின் பரிந்துரையை உபி அரசும் ஏற்று அமலாக்க முடிவு செய்துள்ளது. இதன் பலன், உபி மாநில அரசின் 18 பல்கலைழகங்கள் மற்றும் அதன் கல்லூரிகளில் பயிலும் சுமார் 49 லட்சம் மாணவ, மாணவியர்களுக்கு கிடைக்க உள்ளது.

இதன் மீதான அதிகாரபூர்வ அறிவிப்பை முதல்வர் யோகி அரசு எந்நேரமும் வெளியிட உள்ளது. உ.பி. அரசின் முடிவுகளை பொறுத்து அம்மாநிலத்தில் உள்ள தனியார் பல்கலைழகங்களும் முடிவு செய்ய உள்ளன.

உ.பி.யில் அரசின் 18 மற்றும் தனியார் பல்கலைகழகங்கள் 27 உள்ளன. இதுவன்றி, 169 அரசு மற்றும் 331 அரசு நிதி உதவி பெறும் கல்லூரிகளும் உள்ளன. 6531 லாபம் பெறாதக் கல்லூரிகளும் உ.பி.யில் உள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x