Published : 01 Jul 2020 08:10 AM
Last Updated : 01 Jul 2020 08:10 AM

அர்னாப் கோஸ்வாமிக்கு எதிரான 2 வழக்குகளை நிறுத்தி வைத்தது மும்பை உயர் நீதிமன்றம்

மும்பை

ரிபப்ளிக் டிவி முதன்மை ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமிக்கு எதிராக மகாராஷ்டிராவின் மும்பை மற்றும் நாக்பூர் காவல் நிலையத்தில் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

மகாராஷ்டிராவின் பால்கார் மாவட்டத்தில், குழந்தை கடத்தல்காரர்கள் என்ற புரளியின் பேரில் 2 சாதுக்களும் அவர்களின் கார் ஓட்டுநரும் கடந்த ஏப்ரலில் ஒரு கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டனர். இது தொடர்பாகவும் ஊரடங்கு காலத்தில் பாந்த்ரா ரயில் நிலையம் முன்பு புலம்பெயர் தொழிலாளர்கள் திரண்டிருந்தது தொடர்பாகவும் ரிபப்ளிக் டி.வி.யில் வெளியான கருத்து, வன்முறையை தூண்டும் வகையில் இருந்ததாக அப்புகாரில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்குகளை ரத்து செய்யக் கோரி அர்னாப் கோஸ்வாமி தாக்கல் செய்த மனு மும்பை உயர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது கோஸ்வாமிக்கு எதிரான புகார்கள், கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது என அவரது வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே வாதிட்டார். மகாராஷ்டிர அரசு சார்பில், “பத்திரிகையாளருக்கு கருத்து சுதந்திரம் உள்ளது. ஆனால் ஒருவர் குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர் என்பதால்தான் அடித்துக் கொல்லப்பட்டார் என்று கூற உரிமையில்லை” என்று தெரிவிக்கப்பட்டது.

மேலும் நிகழ்ச்சியில் வெளியான கருத்துகள் எழுத்து வடிவில் அளிக்கப்பட்டது. இதையடுத்து, நீதிபதிகள், இந்த வழக்கில் இறுதி முடிவு எடுக்கும் வரை கோஸ்வாமிக்கு எதிராக கட்டாய நடவடிக்கை எதுவும் போலீஸார் எடுக்கக் கூடாது என உத்தரவிட்டு வழக்கை தள்ளி வைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x