பிஹார் சட்டப் பேரவைத் தேர்தல்: தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணி கட்சிகளுடன் அமித் ஷா ஆலோசனை

பிஹார் சட்டப் பேரவைத் தேர்தல்: தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணி கட்சிகளுடன் அமித் ஷா ஆலோசனை
Updated on
1 min read

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணி கட்சிகளுடன் பாஜக தலைவர் அமித் ஷா டெல்லியில் நேற்று ஆலோசனை நடத்தினார்.

அந்த கூட்டணியின் தொகுதிப் பங்கீடு வரும் 6-ம் தேதி வெளியிடப் படும் என்று முன்னாள் முதல்வர் ஜிதன்ராம் மாஞ்சி தெரிவித்தார்.

பிஹார் சட்டப் பேரவைத் தேர்தல் அக்டோபர் அல்லது நவம்பரில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை முன்னிட்டு ஆளும் ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு), ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி), காங்கிரஸ் ஆகியவை கூட்டணி அமைத்துள்ளது. அந்த கூட்டணியில் ஜேடியு, ஆர்ஜேடி ஆகியவை தலா 100 தொகுதிகளும் காங்கிரஸ் 40 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.

பாஜக கூட்டணியில் லோக் ஜன சக்தி, முன்னாள் முதல்வர் ஜிதன் ராம் மாஞ்சி உள்ளிட்டோர் உள்ளனர். இதுவரை தொகுதிப் பங்கீடு குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை.

இந்நிலையில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா தலைமையில் டெல்லியில் நேற்று தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் மத்திய அமைச்சரும் லோக் ஜன சக்தி தலைவருமான ராம்விலாஸ் பாஸ் வான், முன்னாள் முதல்வர் ஜிதன்ராம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்துக்குப் பிறகு பாஸ்வான் நிருபர்களுக்கு பேட்டி யளித்தார்.

பிஹார் தேர்தலில் பாஜக 102 இடங்களில் மட்டுமே போட்டியிட வேண்டும், இதர 142 இடங்களை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுவது குறித்து பாஸ்வானிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்குப் பதிலளித்த அவர், இதுகுறித்து எதுவும் முடிவு செய்யப்படவில்லை, தொகுதிப் பங்கீடு விரைவில் முடிவு செய்யப்படும். அப்போது அனைத்து தகவல்களும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்றார்.

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் யார் முதல்வர் வேட்பாளராக முன்நிறுத்தப்படுவார் என்று பாஸ்வானிடம் நிருபர்கள் கேட்டபோது, பிரதமர் நரேந்திர மோடி தேர்வு செய்யும் நபர் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்று தெரிவித்தார்.

பாட்னாவில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற ஆளும் கூட்டணியின் சுயமரியாதை கூட்டம் குறித்து கேட்டபோது, நிதிஷ்குமார், லாலு பிரசாத்துக்கு முன்பாக சோனியா காந்தி பேசினார். இது அவருக்கு மிகப்பெரிய அவமானம் என்று குறிப்பிட்டார்.

முன்னாள் முதல்வர் ஜிதன்ராம் மாஞ்சி நிருபர்களிடம் பேசியபோது, வரும் 6, 7-ம் தேதிகளில் தொகுதிப் பங்கீடு குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in